வழிபாடு

நெல்லையப்பர் கோவில் தேர் சுத்தப்படுத்தும் பணி

Published On 2022-06-27 08:17 GMT   |   Update On 2022-06-27 08:17 GMT
  • நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்ட திருவிழா வருகிற 3-ந்தேதி தொடங்குகிறது.
  • விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 11-ந்தேதி நடைபெறுகிறது.

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்ட திருவிழா வருகிற 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழா நாட்களில் தினமும் காலையிலும், மாலையிலும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடக்கிறது. மேலும் விழாவில் காலை, மாலையிலும் சுவாமி-அம்பாள் வீதி உலா வருதல் நடக்கின்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 11-ந் தேதி நடைபெறுகிறது.

இந்த தேரோட்டத்தில் விநாயகர், சுப்பிரமணியர், சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய 5 தேர்கள் பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. இந்த நிலையில் தேர் சுத்தம் செய்யப்பட்டு சாரம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று சுவாமி தேரை தீயணைப்புப்படை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே தேரோட்டத்தை பார்க்க வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் நெல்லையப்பர் கோவிலில் நேற்று பக்தானந்தா சுவாமி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் தேரோட்டத்தில் கலந்து கொள்ளும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

Tags:    

Similar News