வழிபாடு

ராஜராஜேசுவரி அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் நாளை காட்சி தருகிறார்

Published On 2022-09-25 07:32 GMT   |   Update On 2022-09-25 07:32 GMT
  • மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா நாளை தொடங்குகிறது.
  • 15 அரங்குகளில் கொலு பொம்மைகள் வைக்கப்படுகின்றன.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் மீனாட்சி அம்மனுக்கு என்று தனியாக ஆடி முளைக்கொட்டு விழா, நவராத்திரி விழா, ஐப்பசி கோலாட்ட உற்சவ விழா போன்ற திருவிழாக்கள் நடைபெறுகி்ன்றன.

இந்த ஆண்டுக்்கான நவராத்திரி உற்சவ விழா நாளை(26-ந்தேதி) தொடங்கி அடுத்தமாதம்(அக்டோபர்) 5-ந் தேதி வரை நடக்கிறது.

நவராத்திரி திருவிழா நாட்களில் தினசரி மாலை 6 மணி இரவு 8.30 மணி வரை முதல் மூலவர் மீனாட்சி அம்மனுக்கு திரை போட்டு அபிஷேகம், அலங்காரமாகி கல்ப பூஜை மற்றும் சகஸ்ரநாம பூஜை போன்ற பூஜைகள் நடைபெறும். அந்த நேரத்தில் பக்தர்களுக்கு அர்ச்சனைகள் மூலஸ்தான அம்மனுக்கு நடத்தப்படாது. கொலு மண்டபத்தில் எழுந்தருளும் அலங்கார அம்மனுக்குதான் அர்ச்சனைகள் செய்யப்படும். மேலும் சன்னதி முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட உள்ளது.

நவராத்திரி திருவிழாவையொட்டி அம்மன் சன்னதி 2-ம் பிரகாரத்தில் உள்ள கொலு மண்டபத்தில் எழுந்தருளும் உற்சவர் மீனாட்சி அம்மன் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சி தருவார்.

அதன்படி 26-ந் தேதி (நாளை) ராஜராஜேஸ்வரி அலங்காரமும், 27-ந் தேதி கோலாட்ட அலங்காரமும், 28-ந் தேதி மீனாட்சி பட்டாபிஷேக அலங்காரமும், 29-ந்தேதி தட்சிணாமூர்த்தி அலங்காரமும், 30-ந் தேதி வெள்ளி ஊஞ்சல் அலங்காரமும், அடுத்த மாதம் 1-ந் தேதி அர்த்தநாரீஸ்வரர் அலங்காரமும், 2-ந் தேதி தண்ணீர் பந்தல் வைத்தல் அலங்காரமும், 3-ந் தேதி மகிஷாசூரமர்த்தினி அலங்காரமும், 4-ந் தேதி சிவபூஜை செய்யும் அலங்காரமும் நடைபெற்று, சிறப்பு பூஜை நடக்கிறது.

சுவாமி சன்னதி 2-ம் பிரகாரத்தில் கொலு அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 15-க்கும் மேற்பட்ட அரங்குகளில் கொலு பொம்மைகள், சிவபெருமானின் 64 திருவிளையாடல் தொடர்பான பொம்மைகள் உள்ளிட்ட இதர பொம்மைகள் வைக்கப்பட உள்ளன. இதுதவிர சுவாமியின் வாகனங்களும் கொலு சுவாடிகளில் இடம் பெறும். பக்தர்கள் அதனை தரிசிக்கும் வகையில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் திருவிழாவையொட்டி பொற்றாமரைகுளம், கோபுரங்கள், மற்றும் சன்னதிகளில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. இது தவிர பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

திருவிழா நடைபெறும் நாட்களில் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம், வீணை இசைக் கச்சேரி, கர்நாடக இசை நிகழ்்ச்சி,, தோற்பாவை கூத்து, பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு போன்றவையும் நடக்கின்றன.

விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், துணை கமிஷனர் அருணாசலம் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

Tags:    

Similar News