வழிபாடு

நடனபாதேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்

Published On 2022-07-04 06:54 GMT   |   Update On 2022-07-04 06:54 GMT
  • 8-ந்தேதி அதிகார நந்தி உற்சவமும், திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது.
  • 10-ந்தேதி காலை 9 மணியளவில் தேரோட்டம் நடைபெற உள்ளது.

நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரத்தில் 1,600 ஆண்டுகள் பழமையான நடனபாதேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவம் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்தாண்டுக்கான பிரம்மோற்சவம் கடந்த 30-ந்தேதி பிடாரி அம்மன் உற்சவத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் விநாயகர் பூஜை மற்றும் பெரியசாமி வாகனத்தில் சாமி வீதி உலா நடைபெற்றது.

தொடர்ந்து நேற்று கொடியேற்றம் நடைபெற்றது. இதையொட்டி நடன பாதேஸ்வரர் மற்றும் அஸ்தாளம்பிகை தாயாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்று, கொடிமரம் முன்பு எழுந்தருளினர். பின்னர் கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பிரம்மோற்சவ கொடியேற்றப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாலை சூரிய பிரபை வாகனத்தில் சாமி வீதியுலா நடைபெற்றது.

விழாவில் தினசரி காலையில் சாமிக்கு சிறப்பு பூஜையும், இரவில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதிஉலாவும் நடைபெற உள்ளது. மேலும் வருகிற 8-ந்தேதி காலையில் அதிகார நந்தி உற்சவமும், மாலையில் திருக்கல்யாண உற்சவமும் 10-ந்தேதி காலை 9 மணியளவில் தேரோட்டமும் நடைபெற உள்ளது. 11-ந்தேதி காலை நடராஜர் தரிசனம், மாலை தீர்த்தவாரி, 12-ந்தேதி காலை சண்டிகேஸ்வரர் உற்சவம், இரவு ரிஷப வாகனம் வீதி உலா, 13-ந் தேதி இரவு தெப்பல் உற்சவம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் மகாதேவி தலைமையில் கணக்கர் சரவணன், கவுன்சிலர் செல்வகுமார் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News