காரைக்கால் தூய தேற்றரவு அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
- 15-ந் தேதி பெரிய தேர்பவனி நடைபெற உள்ளது.
- 16-ந் தேதி கொடியிறக்கம் நடைபெற உள்ளது.
காரைக்கால் மாதாகோவில் வீதியில், 136 ஆண்டுகள் பழமைவாய்ந்த தூய தேற்றரவு அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 281-வது ஆண்டு திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, ஆலயத்தில் இருந்து எடுத்துவரப்பட்ட மாதா கொடி, பங்கு மக்களால் ஊர்வலமாக சுமந்துவரப்பட்டது.
அதுசமயம், பங்கு மக்கள் கொடிக்கு மலர் தூவி தொட்டு வணங்கினர். பின்னர், மாலை 6.30 மணிக்கு, மாவட்ட முதன்மை பங்குத்தந்தை அந்தோணிராஜ் தலைமையில், வேளாங்கண்ணி பேராலய அதிபர் இருதயராஜ் கொடியை மந்திரித்து, புனித நீர் தெளித்து, ஏற்றி வைத்தார்.
விழாவில், காரைக்கால் தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி முதல்வர் சி.அந்தோணிராஜ், உதவி பங்குத்தந்தை சின்னப்பன் மற்றும் துணை பங்கு குருக்ககள், அருட்சகோதரிகள், திரளான பங்கு மக்கள் கலந்துகொண்டனர்.விழாவையொட்டி, தினசரி காலை, மாலை திருப்பலியுடன், மாலை 5.30 மணிக்கு சிறிய தேர்பவனி நடைபெறும். விழாவின் 10-ம் நாளான வருகிற 15-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு சிறப்பு திருப்பலி நடைபெற உள்ளது. தொடர்ந்து, மின் அலங்கார பெரிய தேர்பவனி நடைபெற உள்ளது. 16-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 7.30 மணிக்கு கொடியிறக்கம் நடைபெற உள்ளது.