வழிபாடு

மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு இன்று காலை தர்கா வந்தடைந்தது.

ஏர்வாடி தர்காவுக்கு சந்தனக்கூடு இன்று காலை வந்தடைந்தது- மலர் தூவி வரவேற்பு

Published On 2022-06-24 05:19 GMT   |   Update On 2022-06-24 05:19 GMT
  • கடந்த 1-ந்தேதி மவுலுது (புகழ்மாலை) ஓதப்பட்டு சந்தனக்கூடு விழா தொடங்கியது.
  • வருகிற 30-ந்தேதி (வியாழக்கிழமை) கொடியிறக்கம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் உள்ள பாதுஷா நாயகம் தர்காவில் கடந்த 1-ந்தேதி மவுலுது (புகழ்மாலை) ஓதப்பட்டு சந்தனக்கூடு விழா தொடங்கியது. நேற்று மாலை குதிரை ஊர்வலத்துடன் சென்று தர்காவில் போர்வை எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

அதிகாலை ஏர்வாடி முஜிபிர் நல்ல இபுறாகிம் தர்காவில் இருந்து சந்தனக்குடம் எடுத்து, சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு. காலை 6 மணிக்கு தர்கா வந்தடைந்தது, தர்காவை 3 முறை வலம் வந்த பின் சிறப்பு பிரார்த்தனையை மாவட்ட காஜி சலாஹுத்தீன் ஓதினார்.

மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் இருந்தும், ராமநாதபுரத்தில் இருந்தும் ஏர்வாடி தர்காவிற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

ஏர்வாடி சந்தனக்கூடு உருவாக்குவதில் அனைத்து சமுதாய மக்களும் பங்கேற்பதால் ஆண்டுதோறும் மதநல்லிணக்க விழாவாக கொண்டாடி வருகின்றனர்.

தர்கா வளாகத்தில் கூடியிருந்த திரளான பக்தர்கள் மலர்களை தூவி சந்தனகூடை வரவேற்றனர். முன்னதாக தர்கா ஹக்தார்கள் பாதுஷா நாயகம் அடக்க ஸ்தலத்தில் சந்தனம் பூசி, போர்வையை போர்த்தினர். அதன் பின் பக்தர்களுக்கு சந்தனம் வழங்கினர்.

வருகிற 30-ந்தேதி (வியாழக்கிழமை) கொடியிறக்கம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.

ஏற்பாடுகளை தர்கா நிர்வாக கமிட்டி தலைவர் பாக்கிர் சுல்தான், செயலாளர் சிராஜுதீன், உப தலைவர் சாதிக் பாட்ஷா மற்றும் நிர்வாக உறுப்பினர்கள், தர்கா ஹக்தார்கள் செய்தனர். 2 ஆண்டுகளுக்கு பின் சந்தனக்கூடு திருவிழா நடந்தது. இதன் காரணமாக வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

Tags:    

Similar News