சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் இரவு தங்க அனுமதி
- வருகிற 5-ந் தேதி வரை பக்தர்கள் மலை ஏற அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.
- வனப்பகுதியில் ஆடு, கோழி பலியிட்டு சமையல் செய்ய அனுமதி கிடையாது.
மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷ நாட்களில் பக்தர்கள், மலை ஏறிச்சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் நவராத்திரி விழாவும் இங்கு கொண்டாடப்படுகிறது.
சதுரகிரியில் இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழா நடந்து வருகிறது. இதற்காக வருகிற 5-ந் தேதி வரை பக்தர்கள் மலை ஏற அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. விழா நாட்களில் பக்தர்கள் ஆனந்தவள்ளி அம்மனையும், சுவாமியையும் தரிசனம் செய்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்று அதிகாலை முதலே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு குவிந்தனர்.
அப்போது, காட்டுத்தீ காரணமாக பக்தர்கள் மலை ஏற தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
சிவகாசி சப்-கலெக்டர் பிரிதிவிராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வத்திராயிருப்பு தாலுகாவில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் ஆனந்தவல்லி அம்மன் கொலு திருவிழாவை நடத்த அனுமதி கேட்டு மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை பகுதியை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் இரவு நேரத்தில் மலையின் மீது யாரும் தங்க அனுமதிக்கப்படுவதில்லை. காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள். மலைக்கு சென்றவர்கள் மாலை 6 மணிக்குள் கீழே இறங்கி விட வேண்டும். வனப்பகுதியில் ஆடு, கோழி பலியிட்டு சமையல் செய்ய அனுமதி கிடையாது. இதையும் மீறி அனுமதி இன்றி வனப் பகுதிக்குள் செல்பவர்கள் மீது வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.