அமர்நாத் யாத்திரைக்கு ஒரு நாள் போதும்..
- அமர்நாத் பனிலிங்க யாத்திரை 2 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தொடங்கியது.
- டெல்லியில் இருந்து பக்தர்கள் ஒரே நாளில் அமர்நாத் யாத்திரையை முடிக்கலாம்.
ஸ்ரீநகர், காஷ்மீர் அமர்நாத் யாத்திரை ஒவ்வொரு ஆண்டும் 60 நாட்களுக்கு நடைபெறுகிறது. இதில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் இருந்தும், அயல்நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து பனிலிங்கத்தை தரிசித்து செல்கிறார்கள். இந்த ஆண்டுக்கான அமர்நாத் பனிலிங்க யாத்திரை 2 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (ஜூன் 30) தொடங்கியது.
அமர்நாத் யாத்திரை தொடங்குவதை முன்னிட்டு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வருடாந்திர அமர்நாத் யாத்திரை இன்று தொடங்கியுள்ள நிலையில், இந்த ஆண்டு டெல்லியில் இருந்து ஒரே நாளில் அமர்நாத் யாத்திரையை முடிக்கலாம் என்ற தகவலை கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமர்நாத் கோவில் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி நிதிஷ்வர் குமார் கூறியதாவது:- இந்த ஆண்டு டெல்லியில் இருந்து பக்தர்கள் ஒரே நாளில் அமர்நாத் யாத்திரையை முடிக்கலாம். இவர்கள் டெல்லியில் இருந்து விமானம் மூலம் ஸ்ரீநகருக்கும் பிறகு ஸ்ரீநகரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பஞ்சதாரணி வரையும் சென்று அங்கிருந்து குகைக்கோவிலுக்கு செல்லலாம்.
அதன்பின்னர், வழிபாட்டுக்குப் பிறகு ஹெலிகாப்டரில் ஸ்ரீநகர் திரும்பினால், அங்கு நள்ளிரவு வரை டெல்லிக்கு விமான சேவை உள்ளது. மாறாக, யாத்ரீகர்கள் ஸ்ரீநகரில் இருந்து நீல்கிராத் சென்றும் யாத்திரையை முடிக்கலாம். இதற்கு முன் 2 இடங்களுக்கு ஹெலிகாப்டர் சேவை வழங்கப்பட்டது. தற்போது 4 இடங்களுக்கு ஹெலிகாப்டர் சேவை வழங்கப்படுகிறது. ஸ்ரீநகர் - நீல்கிராத் மற்றும் ஸ்ரீநகர் - பஹல்காம் இடையே ஒரு வழி பயணக் கட்டணம் முறையே ரூ.11,700 மற்றும் ரூ.10,800 ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.