வழிபாடு
ஐயப்பன் ஜோதி வடிவில் காட்சி அளிப்பதையும், அதை காண திரண்ட பக்தர்கள் கூட்டத்தையும் படத்தில் காணலாம்.

சபரிமலை பொன்னம்பல மேட்டில் சரண கோ‌ஷம் முழங்க மகர ஜோதி தரிசனம்

Published On 2022-01-15 05:09 GMT   |   Update On 2022-01-15 05:09 GMT
கடந்த ஆண்டு சபரிமலையில் மகர ஜோதி தரிசனத்திற்கு 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகளுடன் கூடுதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் பிரசித்தி பெற்ற விழாக்களில் மகர ஜோதி தரிசனமும் ஒன்று.

இந்த ஆண்டுக்கான மகர ஜோதி தரிசனம் நேற்று மாலை நடந்தது. இந்த நாளில் சூரியன் மறைவுக்கு பின்னர் சபரிமலையில் உள்ள பொன்னம்பல மேட்டில் ஐயப்பன் ஜோதி வடிவாக பக்தர்களுக்கு காட்சி அளிப்பார் என்பது நம்பிக்கை.

அதன்படி நேற்று மாலை ஐயப்பனுக்கு தங்க அங்கி மற்றும் ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு தீபாராதனை தொடங்கியது. பின்னர் 6.45 மணிக்குள் சபரிமலை பொன்னம்பல மேட்டில் ஐயப்பன் ஜோதி வடிவில் பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார்.

மகர ஜோதியை காண சபரிமலையில் இந்த ஆண்டு ஒரு லட்சம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதற்காக சபரிமலை புல்மேடு, ஹில்டாப் பகுதிகளில் பக்தர்கள் நின்று தரிசனம் செய்ய ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.

ஜோதி வடிவில் தோன்றும் ஐயப்பனை தரிசிக்க நேற்று முன்தினம் முதல் சபரிமலையில் பக்தர்கள் திரண்டிருந்தனர். சுமார் 70 ஆயிரம் பக்தர்கள் ஜோதி தரிசனம் செய்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு சபரிமலையில் மகர ஜோதி தரிசனத்திற்கு 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகளுடன் கூடுதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இருமுடி கட்டி வந்த பக்தர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து விழாவில் பங்கேற்றனர்.

மகர ஜோதி தரிசனம் முடிந்ததை தொடர்ந்து இன்று காலை ஐயப்பனுக்கு வழக்கமான பூஜைகள் நடைபெற்றது.

சபரிமலையில் கடந்த மாதம் 26-ந் தேதி மண்டல பூஜை நடந்தது. தொடர்ந்து மகர விளக்கு பூஜைகள் நடந்தது. நேற்றுடன் மகர விளக்கு பூஜை விழாவும் முடிந்தது.

இதை தொடர்ந்து கோவில் நடை வருகிற 20-ந் தேதி அடைக்கப்படுகிறது. 19-ந் தேதி வரை கோவிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். 20-ந் தேதி காலையில் 6.30 மணிக்கு பந்தளம் ராஜ குடும்பத்தினர் கோவிலில் தரிசனம் செய்வார்கள். அதன்பின்பு கோவில் நடை அடைக்கப்படும்.

அதன்பின்பு மாசி மாத பூஜைக்காக பிப்ரவரி மாதம் 12-ந் தேதி கோவில் நடை திறக்கப்படும்.
Tags:    

Similar News