ஆன்மிகம்
12 அம்மன் கோவில் சப்பரங்கள் அணிவகுப்பு

பாளையங்கோட்டையில் தசரா திருவிழா:12 அம்மன் கோவில் சப்பரங்கள் அணிவகுப்பு

Published On 2021-10-16 08:03 GMT   |   Update On 2021-10-16 08:03 GMT
பாளையங்கோட்டையில் தசரா திருவிழாவையொட்டி 12 அம்மன் கோவில் சப்பரங்கள் அணிவகுத்து நின்றது. சப்பரங்களில் வரும் அம்மனை பக்தர்கள் தரிசிக்கவும், தேங்காய் உடைக்கவும் அனுமதி அளிக்கப்படவில்லை.
நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை தசரா திருவிழாவுக்கு புகழ்பெற்ற இடமாகும். இங்கு உள்ள ஆயிரத்தம்மன், பேராத்து செல்வி அம்மன், முப்பிடாதி அம்மன், முத்தாரம்மன், உச்சிமாகாளி அம்மன், உலகம்மன் உள்ளிட்ட 12 அம்மன்கள் சப்பரங்களில் வீதி உலா வந்து, பாளையங்கோட்டை ராமர் கோவில் திடல், கோபாலசாமி கோவில் திடல், மார்க்கெட் ஆகிய இடங்களில் அணிவகுத்து நிற்கும்.

போலீஸ் கட்டுப்பாட்டு அறை அருகே மாரியம்மன் கோவில் முன்பு சப்பரங்களில் எழுந்தருளும் அம்மன்களுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து அங்கு நடைபெறும் சூரசம்ஹார விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக, கோவில்களுக்கு உள்ளேயே தசரா திருவிழாவை எளிமையாக நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதேபோல் பாளையங்கோட்டை தூத்துவாரி அம்மன், தெற்கு முத்தாரம்மன், வடக்கு முத்தாரம்மன், யாதவ உச்சிமாகாளி, விசுவகர்ம உச்சிமகாளி, வடக்கு உச்சிமாகாளி, முப்பிடாதி அம்மன், கிழக்கு உச்சிமாகாளி அம்மன், புதுப்பேட்டை தெரு உலகம்மன் கோவில், புது உலகம்மன் கோவில் ஆகிய அம்மன் கோவில்களிலும் கடந்த 5-ந் தேதி தசரா விழா துர்கா பூஜையுடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் அம்மன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இந்த நிலையில் நேற்று ஆயிரத்தம்மன், பேராட்சி அம்மன், முத்தாரம்மன், உச்சிமாகாளியம்மன், உலகம்மன், முப்புடாதி அம்மன் உள்ளிட்ட 12 அம்மன் கோவில்களிலும் காலையில் துர்கா ஹோமமும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும் நடந்தது. மதியம் 1 மணிக்கு உச்சி கால சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

இதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு 12 அம்மன் கோவிலிலும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து இரவு 10 மணிக்கு 12 அம்மன்களும் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி வீதிகளில் பவனி வந்தனர்.

இதைத் தொடர்ந்து 12 அம்மன் சப்பரங்களும் பாளையங்கோட்டை போலீஸ் கட்டுப்பாட்டு அறை அருகே உள்ள மாரியம்மன் கோவில் மைதானத்தில் ஒன்றுகூடி அணிவகுத்து நின்றன. அப்போது சூரசம்ஹாரம் நடந்தது. பின்னர் 12 அம்மன்களுக்கும் தீபாராதனை நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

ஒவ்வொரு சப்பரத்துடன் 12 பேர் மட்டுமே செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. சப்பரங்களில் வரும் அம்மனை பக்தர்கள் தரிசிக்கவும், தேங்காய் உடைக்கவும் அனுமதி அளிக்கப்படவில்லை. சப்பரங்களுடன் வந்தவர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்தனர்.
Tags:    

Similar News