ஆன்மிகம்
பக்தர்களுக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு பிரசாதம் வழங்கிய போது எடுத்த படம்.

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

Published On 2021-04-12 03:10 GMT   |   Update On 2021-04-12 03:10 GMT
கொரோனா காரணமாக சபரிமலையில் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டு உள்ளது. சபரிமலை வெர்சுவல் க்யூவில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
விஷூ பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. பங்குனி மாத பூஜை மற்றும் ஆறாட்டு விழாவையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மார்ச் 14-ந் தேதி திறக்கப்பட்டது.

19-ந் தேதி பங்குனி ஆறாட்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் விழா கோலாகலமாக நடந்தது.. நிறைவாக 28-ந் தேதி ஆறாட்டுடன் விழா நிறைவடைந்தது. அன்று இரவு நடை சாத்தப்பட்டது.

இந்த நிலையில், விஷூ பண்டிகை, சித்திரை மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார். ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளுடன் நெய் அபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, கலசாபிஷேகம், சகஸ்ர கலச பூஜை, படி பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

14-ந் தேதி விஷூ பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகளுடன் கனி காணுதல் நடைபெறும். அன்று பக்தர்களுக்கு கை நீட்டமாக நாணயங்களை தந்திரி, மேல்சாந்தி ஆகியோர் வழங்குவார்கள். தொடர்ந்து 18-ந் தேதி வரை சித்திரை மாத சிறப்பு பூஜைகள் நடைபெறும். அன்றைய தினம் இரவு 9 மணிக்கு நடை அடைக்கப்படும்.

கொரோனா காரணமாக சபரிமலையில் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டு உள்ளது. சபரிமலை வெர்சுவல் க்யூவில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

11-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை தினசரி 10 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். அனைத்து பக்தர்களுக்கும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News