ஆன்மிகம்
மாகாளியம்மன் கோவிலில் அம்மன் முகத்தில் வியர்வை வடிந்ததாக பரபரப்பு
கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் அம்மன் முகத்தில் வியர்வை வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த ஏராளமான பொதுமக்கள் அங்கு கூடினார்கள்.
கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியில் மாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று காலை 11 மணிக்கு திருமண விழா நடந்தது. பின்னர் மணமக்கள் அம்மனை தரிசனம் செய்தனர். அப்போது அம்மன் முகத்தில் வியர்வை வடிந்ததாக தெரிகிறது. இதை பார்த்த மணமக்கள் மற்றும் பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்தனர். பின்னர் அவர்கள் இது குறித்து கோவில் பூசாரியிடம் தெரிவித்தனர்.
அங்கு வந்த பூசாரி, அம்மன் முகத்தில் வழிந்த வியர்வையை மஞ்சள் துணியால் துடைத்தார். அதன் பின்னரும் அம்மன் முகத்தில் இருந்து தொடர்ந்து வியர்வை வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த ஏராளமான பொதுமக்கள் அங்கு கூடினார்கள். பின்னர் பிற்பகல் 12 மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டது.
பிறகு மீண்டும் மாலை 4 மணிக்கு வந்து கோவிலை திறந்தபோது அம்மன் முகத்தில் மீண்டும் வியர்வை வந்ததால், முகத்தில் சந்தனம் வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்தும் வியர்வை வடிந்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கு மீண்டும் ஏராளமான பக்தர்கள் கூடினார்கள். அவர்கள் பக்தி பரவசத்துடன் அம்மனை வழிபட்டு சென்றனர்.