ஆன்மிகம்
திருப்பதி கோவிலில் 7 மாதங்களுக்கு பிறகு மாடவீதியில் கருடசேவை

திருப்பதி கோவிலில் 7 மாதங்களுக்கு பிறகு மாடவீதியில் கருடசேவை

Published On 2020-12-01 08:43 GMT   |   Update On 2020-12-01 08:43 GMT
7 மாதங்களுக்கு பிறகு ஏழுமலையான் கோவிலில் முதல் முறையாக கார்த்திகை மாத பவுர்ணமியையொட்டி நான்கு மாடவீதிகளில் கருடசேவை உற்சவம் நடந்தது.
கொரோனா தொற்று பரவியதால் கடந்த மார்ச் மாதம் 21-ந்தேதியில் இருந்து ஜூன் மாதம் 7-ந்தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டது. ஜூன் மாதம் 8-ந்தேதியில் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதைத்தொடர்ந்து செப்டம்பர் மாதம் 19-ந்தேதியில் இருந்து 27-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடந்தது. அப்போது நடந்த கருடசேவை கோவில் உள்ளேயே நடந்தது. நான்கு மாடவீதிகளில் நடக்கவில்லை. மேலும் அக்டோபர் மாதம் 16-ந்தேதியில் இருந்து 24-ந்தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்தது. அப்போதும் கருடசேவை கோவில் உள்ளேயே நடந்தது. தங்கக் கருட வாகனம் நான்கு மாடவீதிகளில் உலா வரவில்லை.

இந்த நிலையில் 7 மாதங்களுக்கு பிறகு ஏழுமலையான் கோவிலில் முதல் முறையாக நேற்று இரவு 7 மணியில் இருந்து 8.30 மணிவரை கார்த்திகை மாத பவுர்ணமியையொட்டி நான்கு மாடவீதிகளில் கருடசேவை உற்சவம் நடந்தது. உற்சவர் மலையப்பசாமி தங்க, வைர நகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது மாடவீதிகளில் திரண்டு இருந்த பக்தர்கள் ‘ஏடுகொண்டல வாடா வெங்கடரமணா கோவிந்தா.. கோவிந்தா..’ எனப் பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News