ஆன்மிகம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நாளை கைசிக ஏகாதசி விழா
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இந்த ஆண்டு கைசிக ஏகாதசி விழா நாளை (வியாழக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் அதிகாலை வரை நடைபெறுகிறது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் ஏகாதசி தினத்தன்று கைசிக ஏகாதசி விழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு கைசிக ஏகாதசி விழா நாளை (வியாழக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் அதிகாலை வரை நடைபெறுகிறது.
இதனையொட்டி நாளை முதல் புறப்பாடாக, உற்சவர் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து காலை 10.30 மணிக்கு சந்தனு மண்டபத்தை வந்தடைவார். அங்கு காலை மதியம் 1.30 மணிவரை நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளுவார். பின்னர் மாலை 5.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.
2-வது புறப்பாடாக நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து இரவு 9 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தை வந்தடைவார். அங்கு நம்பெருமாளுக்கு இரவு 11.30 மணி வரை 365 வஸ்திரங்களும், 365 தாம்பூலங்களும், அரையர் சேவையுடன் 365 கற்பூர ஆரத்தியும் சமர்பிக்கப்படும். இரவு 11.30 மணி முதல் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2 மணிவரை நம்பெருமாள் முன் கைசிக புராணம் (பக்திக்கு குலம் தடை இல்லை என்பதை உணர்த்துதல்) எனப்படும் பக்தர் நம்பாடுவான் வரலாற்றை பக்தி சிரத்தையோடு பட்டர் படிப்பார்.
கைசிக புராணத்தை படித்தாலோ அல்லது கேட்டாலோ நற்பயன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
பின்னர் அதிகாலை 5.15 மணிக்கு நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்தில் இருந்து புறப்பட்டு 2-ம் பிரகாரத்தில் மேலப்படி வழியாக காலை 5.45 மணிக்கு கற்பூர படியேற்ற சேவை கண்டருளி காலை 6 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.
நம்பெருமாள் படியேறும் போது பக்தர்கள் பச்சை கற்பூரப்பொடியை நம்பெருமாள் மீது தூவுவர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன், உதவிஆணையர் கந்தசாமி, அறங்காவலர்கள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.