ஆன்மிகம்
அழகர்மலை உச்சியில் திருக்கார்த்திகை தீபம் 29-ந் தேதி ஏற்றப்படுகிறது
அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 29-ந் தேதி மாலை 6 மணிக்கு மேல் நடைபெற உள்ளது.
108 வைணவ தலங்களில் ஒன்றான மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலாகும். இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நிறைவு நாளில் ஒரு திருவிழா நடைபெறுவது வழக்கமாகும். அதன்படி இந்த கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 29-ந் தேதி மாலை 6 மணிக்கு மேல் நடைபெற உள்ளது.
இதையொட்டி அழகர்மலையின் உச்சியில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படும். அதன் பின்னர் மலையடிவாரத்தில் உள்ள கோவில் முழுவதும் கார்த்திகை தீபங்கள் ஏற்றப்படும். இதைதொடர்ந்து மூலவர் ஸ்ரீதேவி, பூமிதேவி, சமேத சுந்தர்ராஜ பெருமாள் கள்ளழகருக்கு சிறப்பு பூஜைகளும், சிறப்பு அலங்காரமும், தீபாராதனைகளும் நடைபெறும்.
பின்னர் மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் பல்லக்கில் சுவாமி புறப்பாடாகி சென்று, பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவில் பின்புறம் உள்ள உறியடி மண்டபம் முன்பாக கள்ளழகர் பெருமாள் எழுந்தருள்வார். அப்போது அங்கு சொக்கப்பனை ஏற்றப்படும். இந்த விழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா செய்து வருகின்றனர்.