ஆன்மிகம்
வேதாரண்யம் அன்னப்பசாமிக்கு சிறப்பு அபிஷேகம்
வேதாரண்யம் அன்னப்பசாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் நகரில் அமைந்துள்ளது அன்னப்பசாமி கோவில். மழை வேண்டியும், அதிக மழை பெய்தால் நிறுத்த வேண்டியும் இந்த சாமிக்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டால் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தற்சமயம் வங்கக்கடலில் உருவாகி உள்ள புயலால் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அதி கனமழை, சூறாவளி வீசும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் மீனவர்கள் மற்றும் பொதுமக்களும் தங்கள் பொருட்களை பாதுகாக்க தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும் தென்னை, மா மரங்களில் மட்டை மற்றும் கிளைகளை வெட்டியும் கூரை வீடுகளை தார்ப்பாய் போட்டு முடியும் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அத்தியாவசிய பொருட் கள் மற்றும் தீப்பெட்டி, மெழுகுவர்த்தி, காய்கறிகளை வாங்கி இருப்பு வைத்துள்ளனர்.
இந்த நிலையில் கனமழை, சூறாவளியில் இருந்து மக்களையும், பொருட்களையும் பாதுகாக்க வேண்டி அன்னப்பசாமிக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தானம், பன்னீர் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சாமிக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பல்வேறு நிவேத்தியங்கள், படையல் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் முககசவம் அணிந்து கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாட்டை சென்னை ரமேஷ் குடும்பத்தினர் செய்திருந்தனர்.