ஆன்மிகம்
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள்

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள்

Published On 2020-10-01 08:03 GMT   |   Update On 2020-10-01 08:03 GMT
விழுப்புரத்தில் இருந்து சுமார் 36 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, திருக்கோவிலூர். இங்கு உலகளந்த பெருமாள் திருக்கோவில் (திரிவிக்ரமர்) உள்ளது.
விழுப்புரத்தில் இருந்து சுமார் 36 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, திருக்கோவிலூர். இங்கு உலகளந்த பெருமாள் திருக்கோவில் (திரிவிக்ரமர்) உள்ளது. இத்தல தாயாரின் திருநாமம் ‘பூங்கோவல் நாச்சியார்’. முன் காலத்தில் மிருகண்டு முனிவர் என்பவர், வாமன மற்றும் திரிவிக்ரம அவதாரக் கோலங்களைக் காண வேண்டும் என்பதற்காக கடுமையாக தவத்தை மேற்கொண்டார்.

அவரது தவத்தைக் கண்டு பிரம்மன் வியப்படைந்தார். உடனே மிருகண்டு முனிவரின் முன்பாகத் தோன்றி, “முனிவரே.. தாங்கள் கிருஷ்ண பத்திரா நதிக்கரையில், கிருஷ்ணன் என்ற திருநாமத்தோடு இறைவன் வீற்றிருக்கும் தலத்திற்குச் சென்று தவம் செய்யுங்கள்” என்று பணித்தார். அதன்படியே அந்த தலத்திற்குச் சென்று தவம் இருந்த மிருகண்டு முனிவருக்கு, வாமன மற்றும் திரிவிக்ரம தரிசனம் கிடைத்தது.

இத்தலம் முன்காலத்தில் ‘கிருஷ்ணன் கோவில்’ என்றே அழைக்கப்பட்டு வந்தது. மிருகண்டு முனிவருக்கு, திரிவிக்ரமராக தரிசனம் தரும் முன்பு இருந்த கிருஷ்ணன் சன்னிதி, தற்போதும் இந்த ஆலயத்தின் முன்புறத்தில் அமைந்துள்ளது. சாளக்கிராமத்தால் ஆன திருமேனியைக் கொண்ட ஆதிகிருஷ்ணர், இங்கு ஆனந்த கோலத்தில் அருள்புரிகிறார். இதை அறிந்த துர்க்கையும், விந்திய மலையில் இருந்து புறப்பட்டு இங்கு வந்து கோவில் கொண்டதாக தல வரலாறு சொல்கிறது. இங்கு எழுந்தருளியுள்ள திரிவிக்ரமன், தனது இடது கரத்தில் சக்கரமும், வலது கரத்தில் சங்கும் ஏந்தி அருள்பாலிக்கிறார். அவரது திருமார்பில் ஸ்ரீவத்ஸமும், கண்டத்தில் கவுஸ்துபமும், காதுகளில் குண்டலமும் காணப்படுகின்றன. இந்த ஆலயம் முக்தி தலமாகவும் திகழ்கின்றது.

Tags:    

Similar News