ஆன்மிகம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்

கொரோனா ஊரடங்கு காரணமாக பவுர்ணமி கிரிவலத்திற்கு செல்ல தடை

Published On 2020-09-30 05:22 GMT   |   Update On 2020-09-30 05:22 GMT
கொரோனா ஊரடங்கு காரணமாக திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை விதித்து கலெக்டர் உத்தரவிட்டார்.
திருவண்ணாமலை :

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள்.

கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் மத்திய, மாநில அரசுகளால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் ஆன்மிக ஸ்தலங்களில் பக்தர்கள் சாமி தாிசனம் செய்யவும் தடை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த ஏப்ரல் மாத்தில் இருந்து பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் செல்லவும் மாவட்ட நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் மத்திய, மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் செய்யப்பட்டு பஸ் உள்ளிட்ட வாகன போக்குவரத்து தொடங்கி உள்ளது. மேலும் ஆன்மிக ஸ்தலங்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவும் அனுமதிக்கப்படுகின்றனர். அதன்படி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 1-ந் தேதி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி பக்தர்கள் சிலர் கிரிவலம் சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் நாளை (வியாழக்கிழமை) அதிகாலை 1.10 மணியளவில் தொடங்கி 2-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2.55 மணியளவில் பவுர்ணமி நிறைவடைகிறது. போக்குவரத்து அனைத்தும் சீரானதால் வருகிற பவுர்ணமியன்று திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லலாம் என்று மக்கள் மிகவும் ஆர்வமாகவும், எதிர்பார்ப்பிலும் இருந்தனர்.

ஆனால் தொடர்ந்து கொரோனா ஊரடங்கு விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால் பவுர்ணமியன்று பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கிரிவலம் செல்ல தடை விதித்து மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவிட்டு உள்ளார்.

இதனால் எதிர்ப்பார்ப்பில் இருந்த பொதுமக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. மேலும் பவுர்ணமியன்று கிரிவலப் பாதையில் தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிர பாதுகாப்பு பணியிலும் ஈடுபட உள்ளனர்.
Tags:    

Similar News