ஆன்மிகம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்

திருவண்ணாமலையில் பவுர்ணமிக்கு கிரிவலம் செல்ல அனுமதி அளிக்கப்படுமா?: பக்தர்கள் எதிர்பார்ப்பு

Published On 2020-09-28 08:40 GMT   |   Update On 2020-09-28 08:40 GMT
திருவண்ணாமலையில் பவுர்ணமிக்கு கிரிவலம் செல்ல அனுமதி அளிக்கப்படுமா? என்று பக்தர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள்.

இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் மத்திய, மாநில அரசுகளால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் ஆன்மிக ஸ்தலங்களில் பக்தர்கள் சாமி தாிசனம் செய்யவும் தடை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டது. பவுர்ணமி நாட்களில் கிரிவலப்பாதையில் சிறு, சிறு வியாபாரிகள் மூலம் பல்வேறு கடைகள் அமைக்கப்பட்டு இருக்கும். இதனால் பல்வேறு தரப்பு வியாபாரிகள் பயன்பெற்று வந்தனர். கிரிவலம் தடை செய்யப்பட்டதால் அவர்கள் தற்போது வருமானம் இழந்து வாடி வருகின்றனர்.

இந்த நிலையில் மத்திய, மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் செய்யப்பட்டு பஸ் உள்ளிட்ட வாகன போக்குவரத்து தொடங்கி உள்ளது. மேலும் ஆன்மிக ஸ்தலங்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் அனுமதிக்கப்படுகின்றனர். அதன்படி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 1-ந் தேதி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி பக்தர்கள் சிலர் கிரிவலம் சென்று வருகின்றனர்.

வருகிற 30-ந் தேதி (புதன்கிழமை) நள்ளிரவு 1.30 மணியளவில் தொடங்கி 2-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 3.05 மணியளவில் பவுர்ணமி நிறைவடைகிறது. போக்குவரத்து விடப்பட்டு மக்கள் நடமாட்டம் இயல்பாக உள்ள நிலையில் வருகிற பவுர்ணமிக்காவது திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல அனுமதி அளிக்கப்படுமா? என்று பக்தர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் போதிய கட்டுப்பாடுகளுடன் கிரிவலம் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News