ஆன்மிகம்
திருவண்ணாமலையில் வைகாசி மாத பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை
ஊரடங்கையொட்டி திருவண்ணாமலையில் வைகாசி மாத பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கை யொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். ஊரடங்கு உத்தரவினால் பங்குனி மாதத்தில் வந்த பவுர்ணமி கிரிவலமும், சித்ரா பவுர்ணமி கிரிவலமும் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் வைகாசி பவுர்ணமி வருகிற 5-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2.52 மணிக்கு தொடங்கி மறுநாள் 6-ந்தேதி (சனிக்கிழமை) அதிகாலை 2.42 மணிக்கு நிறைவடைகிறது. தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்பட்டுள்ளதால் பஸ், ரெயில்கள், கார்கள் இயக்கப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு நேரடியாக பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் ஊரடங்கு தளர்வு காரணமாக மக்கள் நடமாட்டமும் அதிகமாக உள்ளது.
இதனால் இந்த மாதத்திற்கு கிரிவலம் செல்ல தடை செய்யப்படுகிறதா? அல்லது இல்லையா? என பக்தர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. இந்த நிலையில் வைகாசி மாத பவுர்ணமிக்கும் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.