ஆன்மிகம்
கோவில் பிரசாதத்தை எப்படி சாப்பிட வேண்டும்?

கோவில் பிரசாதத்தை எப்படி சாப்பிட வேண்டும்?

Published On 2020-05-29 05:32 GMT   |   Update On 2020-05-29 05:32 GMT
இரண்டு கைகளால் இறைவனை நாம் வணங்கியதற்காக வழங்கப்படுகிற பிரசாதத்தை இடது கையில் வைத்துக் கொண்டு, வலது கையால் கொஞ்சம், கொஞ்சமாக எடுத்து சாப்பிட வேண்டும்.
ஆலயங்களில் பண்டிகைகளை முன்னிட்டு பிரசாதங்கள் கொடுப்பது வழக்கம். குறிப்பாக பிரதோஷம், கார்த்திகை, மார்கழி திருப்பள்ளியெழுச்சி, வைகுண்டஏகாதசி, நவராத்திரி, சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி, ஆவணிமூலம், மற்றும் எண்ணற்ற விசேஷங்களுக்கு பிரசாதம் வழங்குவர்.

அப்படி வழங்கும் பொழுது அதை வாங்குவதற்கு கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். சிவன் கோவிலில் வில்வ தீர்த்தமும், பெருமாள் கோவிலில் துளசி தீர்த்தமும் கொடுப்பார்கள். ஒரு சிலர் ஒரு கையால் வாங்குவார்கள். ஒரு சிலர் பிறர் வாங்கியதை தன்கையில் வடித்துவிடச் சொல்வர். ஆனால் முறைப்படி எப்படி வாங்க வேண்டும்? என்பது பலருக்கும் தெரிவதில்லை.

அதே போல சர்க்கரைப் பொங்கல் போன்ற பிரசாதங்களை வாங்கும்பொழுது தன் கைகளில் உள்ள பிரசாதத்தை வாயினால் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். அது சரியானது அல்ல. விலங்குகள் தான் வாயினால் கவ்விச் சாப்பிடக் கூடியவை. ஏனென்றால் அவைகளுக்கு கைகளால் எடுத்து வாய்க்குள் வைத்துக் கொள்ள தெரியாது.

ஆனால் நமக்கு இறைவன் இரண்டு கைகளைக் கொடுத்திருக்கிறான். அந்த இரண்டு கைகளால் இறைவனை நாம் வணங்கியதற்காக வழங்கப்படுகிற பிரசாதத்தை இடது கையில் வைத்துக் கொண்டு, வலது கையால் கொஞ்சம், கொஞ்சமாக எடுத்து சாப்பிட வேண்டும். அங்ஙனம் செய்யாதவர்கள் அடுத்த பிறவியில் விலங்காகப் பிறப்பார்கள் என்று புராணங்கள் சொல்கின்றன.

அதுமட்டுமல்லாமல் தீர்த்தம் வழங்கும் போதும் வரிசையில் நின்று, இடது கைக்கு மேல் வலது கையை வைத்து, உள்ளங்கையில் தீர்த்தத்தை விடச் சொல்லி வாங்கிப் பருக வேண்டும். உள்ளங்கையில் அத்தனை தெய்வங்களும் குடியிருப்பதாக ஐதீகம். அதனால் தான் எழுந்தவுடன் நாம் உள்ளங்கையைப் பார்க்க வேண்டுமென்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.
Tags:    

Similar News