ஆன்மிகம்
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசி திருவிழாவையொட்டி கொடியேற்றப்பட்ட காட்சி

கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா கொடியேற்றம்

Published On 2020-02-26 05:31 GMT   |   Update On 2020-02-26 05:31 GMT
திண்டுக்கல்லில், பக்தர்களின் கோ‌‌ஷம் முழங்க கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவில் கொடியேற்றம் நடந்தது.
திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக, திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலின் மாசித்திருவிழா கடந்த 20-ந் தேதி பூத்தமலர் பூ அலங்காரத்துடன் தொடங்கியது. 21-ந் தேதி பூச்சொரிதல் விழா, 23-ந் தேதி சாட்டுதலும் நடந்தது. அதைத்தொடர்ந்து மாசித்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கொடியேற்றம் நேற்று நடந்தது.

திண்டுக்கல் விஸ்வகர்ம மகாஜன சபா சார்பில் அம்மனுக்கு மஞ்சள் புடவை, திருமாங்கல்யம் சாத்துபடி செய்தபின் கொடியேற்றம் நடைபெறுவது வழக்கம். இதையொட்டி திண்டுக்கல் விஸ்வகர்ம மகாஜன சபா தலைவர் ஏ.கந்தசாமி தலைமையில் சபா மண்டபத்தில் இருந்து அம்மனுக்கு சாத்துபடி செய்யப்படும் மஞ்சள் புடவை, திருமாங்கல்யம் ஆகியவை மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ரதவீதிகள் வழியே வலம் வந்து கோவிலை அடைந்தது.

அதன்பிறகு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மஞ்சள் புடவை, திருமாங்கல்யம் சாத்துபடி செய்தல் நடந்தது. இதேபோல் திண்டுக்கல் டவுன் மார்க்கெட் குமரன் தெரு சாம்பான் குலத்தார் சார்பில் பாலக்கொம்பு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ரதவீதிகள் வழியே சுற்றி கோவிலை வந்தடைந்தது. மேலும் தர்ப்பைபுல் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அதன்பிறகு பாலக்கொம்பு ஊன்றப்பட்டது. இதையடுத்து ஏராளமான பெண்கள் பாலக்கொம்புக்கு மஞ்சள்நீர் ஊற்றினர்.

அதன்பிறகு கோவில் நிர்வாக பரம்பரை அறங்காவலர் சுபா‌ஷினி மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் சார்பில் கொடியேற்றம் நடந்தது. இதையொட்டி மஞ்சள் வண்ண துணியில் சிங்க வாகனத்தில் கோட்டை மாரியம்மன் அமர்ந்து இருப்பதை போன்று வரையப்பட்ட கொடி தயார் நிலையில் இருந்தது. கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பிறகு கொடியில் உள்ள அம்மன் படத்துக்கு கண் திறப்பு நடந்தது.

இதைத்தொடர்ந்து மதியம் 12 மணியளவில் கோவில் கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. அப்போது சுற்றி இருந்த பெண்கள் பக்தி பரவசத்தில் ஓம்சக்தி, பராசக்தி என்று கோ‌‌ஷம் எழுப்பினர்.

இதில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் மருதராஜ், விஸ்வகர்ம அறக்கட்டளை செயலாளர் ஆனந்தன், சங்க செயலாளர் சந்தானம், இணை செயலாளர் சின்னு, சங்க நிர்வாகிகள் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அதன்பிறகு விஸ்வகர்ம அறக்கட்டளை இயக்குனர் குமரேசன் மற்றும் நண்பர்கள் சார்பில் அன்னதானம் நடந்தது.

மாலை 6 மணியளவில் கோவிலில் உள்ள கருப்பணசாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. இரவு 7 மணியளவில் அம்மனின் மின்தேர் வீதிஉலா தொடங்கி ரதவீதிகள் வழியே வலம் வந்து கோவிலை அடைந்தது. 8 மணியளவில் கோவில் கலையரங்கில் திண்டுக்கல் விஸ்வகர்ம பொற்பணியாளர்கள் இளைஞர் சங்கம் சார்பில் வீணை கச்சேரி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை சங்க தலைவர் ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News