ஆன்மிகம்
ஈஷாவில் பிரமாண்டமாக நடந்த மஹாசிவராத்திரி விழா

ஈஷாவில் பிரமாண்டமாக நடந்த மஹாசிவராத்திரி விழா

Published On 2020-02-22 03:47 GMT   |   Update On 2020-02-22 03:59 GMT
கோவை ஈஷா யோகா மையத்தில் 26-ம் ஆண்டு மஹாசிவராத்திரி விழா மிக பிரமாண்டமாகவும், விமர்சையாகவும் நடைபெற்றது. இதில் மாண்புமிகு குடியரசு துணைத் தலைவர் திரு.வெங்கையா நாயுடு அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
கோவை ஈஷா யோகா மையத்தில் 26-ம் ஆண்டு மஹாசிவராத்திரி விழா மிக பிரமாண்டமாகவும், விமர்சையாகவும் நடைபெற்றது. இதில் மாண்புமிகு குடியரசு துணைத் தலைவர் திரு.வெங்கையா நாயுடு அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் நேரில் வருகை தந்து ஆதியோகியை தரிசித்தனர்.

ஒவ்வொரு வருடமும் மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மஹா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. பல அரிய ஆன்மிக சாத்தியங்களை உள்ளடக்கிய வருடத்தின் நீண்ட இரவாக மஹா சிவராத்திரி விளங்குகிறது.  இந்த இரவு முழுவதும் முதுகுதண்டை நேராக வைத்து விழிப்பாக இருப்பது பல நன்மைகளை மக்களுக்கு வழங்கும். இதனை அனைத்து மக்களுக்கும் கொண்டும் சேர்க்கும் விதமாக ஈஷா யோகா மையம் மஹா சிவராத்திரியை ஆண்டுதோறும் மிக விமர்சையாக கொண்டாடி வருகிறது.

அதன்படி, ஈஷாவின் 26-ம் ஆண்டு மஹாசிவராத்திரி விழா பிப்.21-ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை நடந்தது. தியானலிங்கத்தில் நிகழ்த்தப்படும் பஞ்ச பூத ஆராதனையுடன் விழா தொடங்கியது. இந்தாண்டு மஹாசிவராத்திரி விழாவில் மாண்புமிகு குடியரசு துணைத் தலைவர் திரு.வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவரை வரவேற்று சூர்ய குண்டம், நாகா சன்னிதி, லிங்க பைரவி, தியானலிங்கம் ஆகிய இடங்களுக்கு அழைத்து சென்றார்.

அவர்கள் தியானலிங்கத்தில் நடந்த பஞ்ச பூத ஆராதனையில் பங்கேற்றுவிட்டு, ஆதியோகி முன்பு அமைக்கப்பட்டிருந்த விழா மேடைக்கு வருகை தந்தனர். அப்போது லிங்க பைரவி தேவியின் மஹா யாத்திரை நடத்தப்பட்டது. ‘மரணம்’ தொடர்பாக சத்குரு எழுதிய ‘Death – An insight story’ என்ற பெயரிலான புதிய ஆங்கில புத்தகத்தை குடியரசு துணைத் தலைவர் அவர்கள் வெளியிட்டார்.

விழாவில் சத்குரு பேசுகையில், “மஹாசிவராத்திரி விழாவுக்கு வந்துள்ள அனைவருக்கும் எனது வணக்கங்கள். வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் இருப்பது, நமக்கான ஒரு அருள். இந்த நாளில் கிரகங்களின் அமைப்புகளால் நம் உயிர் சக்தி இயற்கையாகவே, மேல்நோக்கி செல்லும் வாய்ப்புள்ளது. இந்த இரவு வெறும் விழித்து இருக்கும் இரவாக இல்லாமல், விழிப்புணர்வுடன் இருக்கும் இரவாக அமையட்டும். நம்முள் இருக்கும் அனைத்து தடைகளை உடைப்பதற்கு இந்த இரவு மிகவும் உறுதுணையாக இருக்கும்” என்றார்.

குடியரசு துணைத் தலைவர் பேசியதாவது:

மஹாசிவராத்திரி கொண்டாடும் எல்லா பக்தர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். இந்த விழா நம் ஆற்றலை பெருக்கி கொள்ள நல்ல சந்தர்ப்பம். ஈஷா யோகா மையத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்கும் இவ்விழாவை நடத்தும் சத்குரு அவர்களை நான் பாராட்டுகிறேன். இதன்மூலம், அவர் அமைதி, வளர்ச்சி மற்றும் சகோதரத்துவத்தை பரப்புகிறார்.

சிவனுக்கு மரியாதை அளிப்பதற்கான ஒரு சிறந்த நாளாக இது உள்ளது. சிவன் ஆதியோகி, அதாவது உலகின் முதல் யோகி எனவும் அழைக்கப்படுகிறார். 12 ஜோதிர் லிங்கங்கள் இந்தியா முழுவதும் இருப்பதன் மூலம் சிவன் இந்தியா முழுவதும் பரவி இருக்கிறார் என்பதை அறியலாம்.

நாம் மொழி, ஆடைகள், கடவுளை வழிபடும் முறை என பலவகையில் வேறுபட்டு இருந்தாலும் சாதி, மத, இனங்களை கடந்து இந்தியர் என்ற உணர்வால் ஒன்றாக உள்ளோம். உலகமே ஒரு குடும்பம் என பார்க்கும் ஒரே கலாச்சாரம் நம் இந்திய கலாச்சாரம் தான். இது தான் பாரத கலாச்சாரத்தின் சிறப்பு. மஹாசிவராத்திரி போன்ற விழாக்கள் மூலம் இந்த கலாச்சாரத்தை பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லும் பொறுப்பு நம்மிடம் இருக்கிறது.



மஹாசிவராத்திரி விழா இங்கு இவ்வளவு பிரமாண்டமாக நடப்பதை பார்ப்பது அற்புதமாக உள்ளது. இந்த அனைத்து முயற்சிகளும் சத்குரு என்னும் ஒருவரால் தான் சாத்தியப்பட்டுள்ளது. சத்குருவிடம் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு உள்ளது. மிக கடினமான விஷயங்களை கூட ஒரு மிக எளிய முறையில் சாமானிய மக்களுக்கு புரியும் வகையில் பேசுகிறார். அவரை போன்ற பல யோகிகள், ரிஷிகள் நமக்கு தேவை.

யோகா என்பது ஒரு மதத்துடன் தொடர்பு உடையது அல்ல. அது ஒரு அறிவியல்பூர்வமானது. ஐ.நா சபையின் மூலம் யோகாவை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்ததற்காக பாரத பிரதமருக்கு இத்தருணத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அதற்கு சத்குரு உள்ளிட்ட பலரும் உறுதுணையாக இருந்துள்ளார்கள். யோகா மோடிக்காக அல்ல. நம் உடல்நலனுக்காக. (Yoga is not for Modi, it is for our body).

இயற்கையையும், கலாச்சாரத்தையும் காப்பது நம் வருங்காலத்தை செழுமைப்படுத்தும். இதற்காக, நம் நதிகளுக்கு புத்துயீருட்டும் விதமாக காவேரி கூக்குரல் என்னும் மாபெரும் இயக்கத்தை சத்குரு முன்னெடுத்துள்ளார். அந்த இயக்கத்தில் அனைவரும் பங்கேற்று அதை மேலும் வலுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

இவ்விழாவில் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் நேரில் பங்கேற்றனர். மேலும், ஹிமாச்சல் பிரதேச ஆளுநர் திரு.பண்டாரு தத்தாத்ரேயா, மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் திரு.கஜேந்திர சிங் ஷெகாவத், மத்திய அமைச்சர் திரு.அஸ்வினி குமார், தமிழக அமைச்சர்கள் திரு.உடுமலை ராதாகிருஷ்ணன், திரு.திண்டுக்கல் சீனிவாசன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் திரு.ஜி.கே.வாசன் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்களும் பங்கேற்றனர்.  

மஹா சிவராத்திரியின் முக்கிய நிகழ்வான நள்ளிரவு தியானம் சத்குரு அவர்களால் நடத்தப்பட்டது. இதில் லட்சக்கணக்கான மக்கள் தியான நிலையில் ஆம் நமசிவாய மந்திர உச்சாடனம் மற்றும் சில குறிப்பிட்ட தியான முறைகளை மேற்கொண்டனர். அத்தருணம் மக்கள் அனைவரும் ஆனந்ததில் திளைத்தும், அசைவில்லா தியான நிலைகளிலும் இருந்தனர்.

பிரபல நாட்டுப்புற பாடகர் திரு. அந்தோணி தாசன் அவர்களின் இசை நிகழ்ச்சி மக்களை துள்ளி நடனமாட வைத்தது. மேலும், திரை பாடகர் திரு. கார்த்திக் அவர்களின் இனிமையான இசை நிகழ்ச்சியும், கபீர் கபே குழுவின் துள்ளலான இசை நிகழ்ச்சியும் இரவு முழுவதும் மக்களை விழிப்பாக வைத்திருந்தது.
ஈஷா சம்ஸ்க்ருதி மாணவர்களின் களரி மற்றும் நாட்டிய நிகழ்ச்சி காண்போரை பிரம்மிப்பில் ஆழ்த்தியது. மேலும் அவர்கள் பாடிய தேவார இசை பாடல்கள் மக்களை பக்தியில் பரவசப்படுத்தியது. விழாவுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் ஆதியோகி ஒரு வருடமாக அணிந்திருந்த 1 லட்சத்து 8 ருத்ராட்ச மணிகளும், சர்ப்ப சூத்திரமும் பிரசாதமாக வழங்கப்பட்டது.

நாட்டு மாட்டு இனங்களை பாதுகாப்பதற்காக ஈஷா யோகா மையத்தில் 350 க்கும் மேற்பட்ட பாரம்பரிய நாட்டு மாடுகள் வளர்க்கப்படுகின்றன. அம்மாடுகளின் கண்காட்சியும் நடைபெற்றது. இதில் பல்வேறு நாட்டு மாடுகளின் பெயர்களும் அதனை பற்றிய முக்கிய தகவல்களும் இடம்பெற்றிருந்தன. ஈஷா மஹாசிவராத்திரி விழாவில் குடியரசு துணைத் தலைவர் முதல் தமிழகத்தின் சிறு கிராமம் வரையுள்ள பலதரப்பட்ட மக்கள் சாதி, மத, இன பாகுபாடு இன்றி பங்கேற்றனர். முக்கியமாக ஈஷா யோகா மையம் அமைந்துள்ள பகுதியை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. மேலும் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் சங்கம் சார்பாகவும் மற்றும் பல்வேறு பகுதிகளை சார்ந்த விவசாயிகளும் கலந்துகொண்டனர். இரவு முழுவதும் தொடர்ந்த நிகழ்ச்சிகள் இன்று காலை 6 மணிக்கு சத்குரு அவர்களின் நிறைவுறையோடு முடிவடைந்தது.
Tags:    

Similar News