ஆன்மிகம்
சிவாலய ஓட்டம்

சிவாலய ஓட்டம்: 12 சிவாலயங்கள் உருவான கதை

Published On 2020-02-19 08:00 GMT   |   Update On 2020-02-19 08:00 GMT
சிவனும், விஷ்ணுவும் ஒன்று என்பதை உணர்த்துவதற்காக சிவாலய ஓட்டம் நிகழ்வு நடந்ததாக சொல்லப்படுகிறது. பீமன் ஓடியதன் விளைவாகவே, சிவராத்திரி அன்று பக்தர்கள் அனைவரும் 12 ஆலயங்களுக்கும் ஓடியே வழிபடுகிறார்கள்.
மகாபாரத போர் முடிந்ததும் தர்மர் தனது பாவங்களை போக்க எண்ணினார். இதற்காக அவர் ஒரு யாகம் நடத்த முடிவு செய்தார். அந்த யாகத்திற்கு, மனிதனும், சிங்கமும் கலந்த புருஷாமிருகத்தின் பால் தேவைப்பட்டது. அதிக பலமும், கொடூர குணமும் கொண்ட அந்த மிருகத்தின் பாலைக் கொண்டுவர பீமனால்தான் முடியும் என்று கண்ணபிரான் கூறினார்.

ஆனால் அதற்கு பீமன் தயங்கினான். அப்போது கண்ணன், பீமனுக்கு ஊக்கம் அளித்தார். அதோடு அவனிடம் 12 ருத்ராட்சங்களையும் வழங்கினார்.

“பீமா! இந்த புருஷாமிருகம் சிவனைத்தவிர வேறு யாரையும் வணங்காது. விஷ்ணுவின் நாமத்தைக் கேட்டாலே அது கடுங்கோபம் அடையும். அதனால் நீ கோபாலா.. கோவிந்தா.. என்று சொல்லிக் கொண்டே போ. அது உன்னை துரத்தும். அப்போது நான் உன்னிடம் கொடுத்துள்ள 12 ருத்ராட்சங்களில் ஒன்றை எடுத்து தரையில் வை. அது சிவலிங்கமாக மாறும். உடனே அந்த மிருகம் சாந்தமடைந்து லிங்க பூஜை செய்யத் தொடங்கிவிடும். அப்போது அது ஆழ்ந்த பக்தி மயக்கத்தில் இருக்கும். அதுதான் நீ அதனிடம் இருந்து பாலை கறக்க சரியான தருணம்” என்று அறிவுறுத்தினார்.

காட்டிற்குச் சென்ற பீமன், புருஷாமிருகத்தைக் கண்டதும் “கோவிந்தா.. கோபாலா..” என்று கூறினான். அதைக் கேட்டு கோபம் அடைந்த அது, பீமனைக் கொல்ல வந்தது. பீமன் ஓட ஆரம்பித்தான். ஒரு கட்டத்தில் பீமனுக்கு களைப்பு ஏற்பட, தன் கையில் இருந்த ருத்ராட்சத்தில் ஒன்றை தரையில் போட்டான். அது சிவலிங்கமாக மாறியது. சிவலிங்கத்தைப் பார்த்ததும் சாந்தமான புருஷா மிருகம், சிவபூஜை செய்யத் தொடங்கியது.

அப்போது அதனிடம் பால் கறந்தான் பீமன். ஆனால் உடனடியாக விழித்துக் கொண்ட புருஷாமிருகம், மீண்டும் பீமனை துரத்தியது. இப்படியே 12 ருத்ராட்சங்களையும் பீமன் போட்ட இடங்களில் 12 சிவலிங்கங்கள் தோன்றின. அந்த சிவலிங்கங்களை கண்டு சிவ பூஜை செய்யும் வேளையில், புருஷாமிருகத்திடம் இருந்து பீமன் பால் கறக்க முயற்சித்தான். இறுதிவரை அந்த எண்ணம் பலனளிக்க வில்லை. இதனால் பீமன் காட்டிற்குள் வெகுதூரம் ஓடினான். அவரை பிடித்த புருஷா மிருகம், “என்னுடைய இடத்தில் அகப்பட்டதால், நீ எனக்குத்தான் சொந்தம்” என்றது. அதன் பிடியில் இருந்த பலமை வாய்ந்த பீமனால் விடுபடமுடியவில்லை. அதே நேரம் 12 சிவலிங்கங்களும், 12 விஷ்ணுவாக உருமாறுவது புருஷாமிருகத்தின் அகக்கண்ணுக்குத் தெரிந்தது. அதன் பிறகே அதற்கு ஞானம் பிறந்து, பீமனை விடுவித்தது.

பீமன் காட்டில் ஸ்தாபித்த 12 லிங்கங்களும் நாளடைவில் 12 சிவாலயங்களாக உருவாகின. சிவனும், விஷ்ணுவும் ஒன்று என்பதை உணர்த்துவதற்காக இந்த நிகழ்வு நடந்ததாக சொல்லப்படுகிறது. பீமன் ஓடியதன் விளைவாகவே, சிவராத்திரி அன்று பக்தர்கள் அனைவரும் 12 ஆலயங்களுக்கும் ஓடியே வழிபடுகிறார்கள் என்றும், ‘கோபாலா.. கோவிந்தா..’ என்ற நாமத்தை உச்சரிக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
Tags:    

Similar News