ஆன்மிகம்
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாசி மாத பூஜை நிறைவையொட்டி, சகஸ்ர கலச பூஜை நடைபெற்ற போது எடுத்த படம்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை அடைக்கப்பட்டது

Published On 2020-02-19 05:45 GMT   |   Update On 2020-02-19 05:45 GMT
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாசிமாத பூஜை நிறைவடைந்தது. இதையொட்டி வழக்கமான பூஜைகளுடன் இரவு அரிவராசனம் பாடி கோவில் நடை சாத்தப்பட்டது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல, மகர விளக்கு சீசன் மற்றும் திருவிழா நாட்களை தவிர ஒவ்வொரு மலையாள மாதத்தின் (தமிழ் மாதத்தின்) முதல் 5 நாட்கள் மற்றும் விஷு, ஓணம் பண்டிகை நாட்களிலும் நடை திறக்கப்பட்டு பூஜை, வழிபாடுகள் நடைபெறும். இந்த நாட்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

இந்த நிலையில் மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 13- ந்தேதி திறக்கப்பட்டது. 14- ந்தேதி முதல் நேற்று வரை தினமும், நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை போன்றவை நடந்தன. வழக்கமான பூஜைகளுடன் தந்திரி கண்டரு மகேஷ் மோகனரு தலைமையில் படிபூஜை, உதயாஸ்தமன பூஜை ஆகிய சிறப்பு பூஜைகளும் நடந்தது.

இந்த நிலையில் நேற்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிரசித்தி பெற்ற சகஸ்ர கலச பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் நடைபெற்ற இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, வழக்கமான பூஜைகளுடன் இரவு அரிவராசனம் பாடி கோவில் நடை சாத்தப்பட்டது. அத்துடன் மாசி மாத பூஜைகள் நிறைவடைந்தது.

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மீண்டும் மார்ச் மாதம் 13- ந் தேதி திறக்கப்படும். 18- ந் தேதி வரை பூஜை மற்றம் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டு திருவிழாவையொட்டி, மார்ச் 28- ந் தேதி கோவில் நடை திறக்கப்படும். 29- ந் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கி 10 நாட்கள் நடைபெறும்.
Tags:    

Similar News