ஆன்மிகம்
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மண் சோறு சாப்பிட்ட பக்தர்கள்

விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மண் சோறு சாப்பிட்ட பக்தர்கள்

Published On 2020-01-28 04:47 GMT   |   Update On 2020-01-28 04:47 GMT
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் மண் சோறு சாப்பிட்டனர். தொடர்ந்து நாளை மறுநாள் பக்தர்கள் இருமுடி கட்டி சமயபுரத்திற்கு ரெயிலில் பயணமாக செல்ல உள்ளனர்.
விருத்தாசலம் ஜங்‌‌ஷன் சாலையில் ஜெகமுத்துமாரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் பக்தர்கள் சமயபுரம் மாரியம்மனுக்கு மாலை அணிந்து யாத்திரை செல்வது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு பக்தர்கள் யாத்திரை செல்வதை முன்னிட்டு திருமணம், குழந்தை செல்வம் மற்றும் பல வேண்டுதல்களுடன் கடந்த 21-ம் தேதி மாலை அணிந்து விரதம் இருந்து வந்தனர். இதன் ஒரு பகுதியாக இந்த பக்தர்கள் மண்சோறு சாப்பிடும் நிகழ்ச்சி நடந்தது. இதனை கலைச்செல்வன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். முன்னதாக ஜெகமுத்துமாரி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது.

இதனை தொடர்ந்து சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய ஜெகமுத்துமாரி அம்மனை யாத்திரை செல்லும் பக்தர்கள் ஜங்‌‌ஷன் சாலை, பாலக்கரை, கடை வீதி, தென் கோட்டை வீதி வழியாக விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலிலுக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து விருத்தகிரீஸ்வரர் கோவிலில் கலை நிகழ்ச்சி மேடையில் அம்மன் எழுந்தருள, பம்பை உடுக்கையுடன் தாலாட்டு பாடல் பாடப்பட்டது. தொடர்ந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவில் வளாகத்தில் தரையில் அமர்ந்து மண்சோறு சாப்பிட்டனர். தொடர்ந்து நாளை மறுநாள் பக்தர்கள் இருமுடி கட்டி சமயபுரத்திற்கு ரெயிலில் பயணமாக செல்ல உள்ளனர்.
Tags:    

Similar News