ஆன்மிகம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த காட்சி.

புத்தாண்டை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்

Published On 2020-01-02 07:40 GMT   |   Update On 2020-01-02 07:40 GMT
புத்தாண்டை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
ஆங்கில புத்தாண்டு நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு பிறந்தது. புத்தாண்டை முன்னிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்கள் வாழ்த்துகளை நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொண்டனர். மேலும் பெரும்பாலான பகுதிகளில் இளைஞர்கள் பட்டாசு வெடித்து, கேக் வெட்டி கொண்டாடினர். அதிகாலையில் பொதுமக்கள் நீராடி கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதில் வெளி மாநிலம், பிற மாவட்ட பக்தர்கள் கோவிலுக்கு அதிகளவு வருகை தந்தனர். கோவிலில் பக்தர்களின் வசதிக்காக பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு கட்டணம் மற்றும் பொது தரிசனம் வழி அமைக்கப்பட்டு இருந்தது. இதனால் பக்தர்கள் சிரமமின்றி வரிசையாக கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

ஆங்கில புத்தாண்டையொட்டி அதிகாலை அருணாசலேஸ்வரர் மற்றும் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் சம்பந்த விநாயகருக்கு வெள்ளி கவச அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் கோவிலில் உள்ள உற்சவ மூர்த்தி சிலைக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு இருந்தது.

அதுமட்டுமின்றி புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு ஏராளமான பக்தர்கள் பனிபொழிவையும் பொருட்படுத்தாமல் கிரிவலம் சென்றனர். பக்தர்கள் வசதிக்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 
Tags:    

Similar News