ஆன்மிகம்
கடவுள் வழிபாடு

கர்மவினை நீங்க வழிபாடே சிறந்த வழி

Published On 2019-12-13 04:45 GMT   |   Update On 2019-12-13 04:45 GMT
ஒருவர் தன் வாழ்நாளில் நற்பலன்களை அனுபவிக்க, நிகழ்காலத்தில் கட்டுப்பாட்டுடன் வாழ்வதற்கு ஒரு முயற்சியாகவே, நம் முன்னோர்கள் ஆன்மிகம் மற்றும் மதம் சார்ந்த விஷயங்களை உபதேசித்து இருக்கிறார்கள்.
மனிதன் தன் வாழ்நாளில் மூன்று வகையான கர்மவினைகளை அனுபவிக்கிறான். அவை:- சஞ்சித கர்மம், பிராப்த கர்மம், ஆகாமிய கர்மம் ஆகியவையாகும்.

இதில் ‘சஞ்சித கர்மம்’ என்பது, ஒரு கரு உருவாகும் போதே உடன் உருவாவது. அதாவது தாய், தந்தை, முன்னோர்களிடம் இருந்தும், பல ஜென்மங்களில் ஆத்மா செய்த பாவ புண்ணியங்களும் இந்த பிறவியில் பற்றிக்கொள்ளும்.

‘பிராப்த கர்மம்’ என்பது, ஒரு ஆன்மா பல பிறவிகளில் செய்த பாவ புண்ணிய பலன் மூலம் இந்த பிறவியில் கிடைக்க கூடிய நன்மை தீமையாகும். இதையே வேறு விதமாக சொன்னால் ‘பிராப்தம்’, ‘விதி’, ‘கொடுப்பினை’ என்று கூறலாம். இந்த கர்மாவால் வரும் பலனையும் இந்த பிறவிலேயே அனுபவிக்கவேண்டும்.

‘ஆகாமிய கர்மம்’ மேற்கூறிய இரண்டு கர்மாக்களை கழிக்கச் செய்யும் செயல்கள் மூலம், இப்பிறவியில் வாழும் காலத்தில் ஆசைகளால் பிறருக்கு செய்யும் நன்மை தீமைகளால் வருவது.

இந்த மூன்று வகையான கர்மவினைகளில் இருந்து யாரும் தப்ப முடியாது. மனிதன் தன் வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், குழப்பங்கள், எதிர்ப்புகள், நஷ்டங்கள், கடன்கள், பிரிவினைகள், விபத்துகள், நோய்கள், துன்பங்கள், துயரங்கள் அனைத்தும் மேலே கூறிய கர்மவினை தாக்கத்தால் வருபவை.

ஆனால் பலருக்கும் ‘பரிகாரம் செய்து கர்மவினையை தீர்க்க முடியும்’ என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. ஒவ்வொரு பிரச்சினைக்கும் சில குறிப்பிட்ட பூஜை, வழிபாடு, விரத, பரிகார தலங்களும் உள்ளன. இவற்றையெல்லாம் முறையாக செய்வதன் மூலம் சிலருக்கு உடனே பலன் கிடைக்கலாம். ஒரு சிலருக்கு பலன் கிடைப்பது காலதாமதமாகும். ஒரு பிரிவினருக்கு பலனே கிடைப்பதில்லை.

இப்படி பரிகாரம் பலிதமாகாமல் வருத்தப்படுபவர்கள் பலர் இருக்கிறார்கள். ‘ஏன் சிலருக்கு பரிகாரம் பலன் தருவதில்லை?’ என்று கேள்வி கேட்கும் முன்பு, நாம் அனைவரும் பரிகாரத்திற்கும் வழிபாட்டிற்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ள வேண்டும்.

பரிகாரம் என்பதில் ‘வாழை மரத்திற்கு தாலி கட்டுவது - வெட்டுவது’, ‘தோஷ நிவர்த்தி ஹோமம்’ போன்றவை அடங்கும்.



வழிபாடு என்பது, ‘தாங்கள் அனுபவிப்பது தங்களின் கர்மவினையின்படிதான்’ என்பதை உணர்ந்து, அதை அப்படியே ஏற்றுக்கொள்வதும். இறை நம்பிக்கையுடன் தர்ம காரியங்களைச் செய்து இறைவனின் கருணை தங்கள் மேல் விழுந்து பிறவா நிலையை அடைய முயற்சி செய்வதும் ஆகும்.

ஒருவரது ஜாதகத்தில் லக்னாதிபதி, பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி மற்றும் பாக்கியாதிபதி என்னும் தசை, புத்தி, அந்தர காலங்களில் செய்யும் பரிகாரங்கள் உடனடியாக பலன் கொடுக்கும். ஆறாம், எட்டாம், பன்னிரண்டாம் அதிபதிகளின் தசா புத்திகள், நீச்ச கிரக தசா புத்திகளில் செய்யும் பரிகாரங்கள் பலன் கொடுக்காது. சில சமயங்களில் காலம் தாழ்த்தி பலன் தரலாம். ஆக சாதகமான கிரக தசா, புத்தி காலத்தில் செய்யும் பரிகார பூஜைகள் தான் உரிய பலனைத் தரும்.

அத்துடன் ஜனன கால ஜாதகத்தில் கீழ்கண்ட அமைப்புகள் இருந்தாலும் பரிகாரங்கள் பலன் கொடுக்கும்.

* குரு எந்த பாவகத்தில் இருக்கிறாரோ அல்லது எந்த பாவகத்தைப் பார்க்கிறாரோ, அந்த பாவக பலன்களை பரிகாரங்கள் மூலம் மாற்றி அமைக்க முடியும்.

* சனியும், செவ்வாயும் இணைந்து எந்த பாவகத்தில் இருக்கிறார்களோ அல்லது எந்த பாவகத்தைப் பார்க்கிறார்களோ அந்த பாவக பலன்களை பரிகாரம் செய்து மாற்ற முடியாது. இந்த கிரகங்களுடன் குருவின் சம்பந்தம் இருந்தால் கடினமான பரிகாரம் ஓரளவு பலன் தரும்.

* ஒன்பதுக்குரியவன் எந்த பாவகத்திற்கு அல்லது எந்த பாவக அதிபதிக்கு தொடர்பு பெறுகிறாரோ அந்த பாவ பலன்களை பரிகாரத்தால் அடையலாம்.

* கோச்சாரத்தில் ஐந்து, ஒன்பதாம் அதிபதி வலுப்பெறும் போது செய்யும் பரிகாரமும் பலிதமாகும்.

* குருவிற்கு செவ்வாய் சம்பந்தம் இருந்தால் பரிகாரத்தை விட வழிபாடே நிரந்தர தீர்வு தரும்.

ஒருவர் தன் வாழ்நாளில் நற்பலன்களை அனுபவிக்க, நிகழ்காலத்தில் கட்டுப்பாட்டுடன் வாழ்வதற்கு ஒரு முயற்சியாகவே, நம் முன்னோர்கள் ஆன்மிகம் மற்றும் மதம் சார்ந்த விஷயங்களை உபதேசித்து இருக்கிறார்கள்.

தவறு செய்வது மனித இயல்பு. ஆனால் ஒரு மனிதன் தன் வாழ்நாளில் எவ்வளவு தவறு செய்தாலும் ‘என் மனதால் கூட யாருக்கும் எந்த கெடுதலும் செய்தது இல்லை’ என்றுதான் கூறுவார்கள். இதற்கு தான் செய்வது தவறு என்பதை உணராத அவர்களது அறியாமையும் ஒரு காரணம்.

‘தன் தவறை யாரும் பார்க்கவில்லை, சாட்சி இல்லை’ என்று தவறை மறைக்க முயற்சி செய்வது மற்றொரு காரணம். தவறை மறைக்க முயற்சிப்பவர்களுக்கு எந்த பரிகாரமும், வழிபாடும் பலன் தராது.

சிறு தவறு முதல் பெரும் குற்றங்கள் வரை, மனித வாழ்வின் அனைத்து சம்பவங்களும் கால பகவான் என்னும் கண்காணிப்பு கேமராவால் படம் பிடிக்கப்பட்டு, காலப் பதிவேட்டில் பதியப்படும் என்பதை உணர்ந்தவர்கள் இறைவனிடம் சரணாகதி அடைந்து, அவனது அருட் கருணையால் கர்மவினை நீங்கி சுப வாழ்வு வாழ்கிறார்கள்.

ஒருவன் ஒரு பரிகாரத்தை கடைப்பிடிக்க தொடங்கும் போதே, கர்மா அதன் வேலையை ஆரம்பித்து விடுகிறது. மனிதன் முக்தி அடைவதற்கும், பிறவாப் பெருநிலை அடைவதற்கும் ‘சஞ்சித கர்மா’ முற்றிலும் சரி செய்யப்பட்டு இருக்க வேண்டும். பிறவி எடுத்து சரி செய்வது என்பது முடியாத காரியம். ‘சரணாகதி’ என்னும் இறை வழிபாடே, சஞ்சித கர்மாவிற்கு முற்றுப்புள்ளி வைக்க பிரபஞ்சத்தால் வழங்கப்பட்ட அருட்கொடை.

ஜாதகத்தில் எத்தகைய அமைப்பு இருந்தாலும், வழிபாட்டால் சரி செய்ய முடியாத பிரச்சினைகளே கிடையாது. மனிதன் வாழ்வில் முன்னேற வேண்டுமானால் மனதை நெறிப்படுத்த வேண்டும்.

மனிதர்களுக்கு பொருள் தேடும் விஷயத்தில் உதவுகின்ற கருவியாகவும், ஆபத்து நிறைந்த வாழ்க்கைக் கடலைத் தாண்டும் விஷயத்தில் கப்பலாகவும், எதிரிகளை வெற்றிபெற விரும்பும் சமயங்களில் நல்ல மதிநுட்பம் நிறைந்த மந்திரியாகவும், சுருக்கமாகச் சொன்னால் ஜீவாத்மாவின் பயணத்தை எளிமையாக்கி தனது மார்க்கத்தை உணரச் செய்து, நமது இலக்கை அடைய பேருதவி புரிவது தியானம், யோகா போன்றவையே. இது உலகமறிந்த, மிகப் பழமையான மன, உடல் பயிற்சியாகும்.

ஆன்மாவின் முக்கிய சக்திகளாகிய மனம் மற்றும் புத்தியை பிரபஞ்சத்திடம் சரணடைய செய்யும்போது, உன்னத சக்தியான இறைசக்தி வசப்பட்டு நிரந்தரமான சுப பலன்கள் அடைய முடியும். பரிகாரத்தை விட வழிபாடே நம்மை சிறப்பாக வழிநடத்தும்.

- பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி
Tags:    

Similar News