ஆன்மிகம்
ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்ததை படத்தில் காணலாம்.

காட்டழகிய சிங்கப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2019-12-02 04:48 GMT   |   Update On 2019-12-02 04:48 GMT
ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கப்பெருமாள் கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் மழையையும் பொருட்படுத்தாது பக்தர்கள் குவிந்தனர்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உப கோவிலாக காட்டழகிய சிங்கப்பெருமாள் எனப்படும் லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இக்கோவில் இருக்குமிடம் முற்காலத்தில் அடர்ந்த காட்டுப்பகுதியாக இருந்ததால் இக்கோவில் காட்டழகிய சிங்கப்பெருமாள் கோவில் என்று அழைக்கப் படுகிறது.

இக்கோவிலில் கடந்த 2001-ம் ஆண்டு பிப்ரவரி 11-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. 18 ஆண்டுகளுக்கு பிறகு இக்கோவிலில் முழு அளவில் பழமை மாறாமல் திருப்பணிகளும், வெளிப்பிரகார விரிவாக்கம் உள்பட பல்வேறு மேம்பாட்டுப் பணிகளும் நடைபெற்று நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 18-ந் தேதி கருவறை பாலாலயம் நடைபெற்றது. இதையடுத்து கருவறை சார்ந்த பகுதிகளில் தூய்மை மற்றும் திருப்பணிகள் நடைபெற்றன. 27-ந் தேதி மாலை பாஞ்சராத்தர ஆகம முறைப்படி பூர்வாங்க பூஜைகளும் முதல் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றன. 28-ந் தேதி காலை கொள்ளிடம் ஆற்றிலிருந்து புனிதநீர் வெள்ளிக் குடத்தில் எடுத்து யானை மீது வைத்து ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது.

அதைத்தொடர்ந்து 2-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. அன்று மாலை 3-ம் கால யாக சாலையும், 29-ந் தேதி காலை, மாலை வேளைகளில் முறையே 4,5-ம் கால வேள்விகள் நடைபெற்றன. 30-ந் தேதி காலை, மாலை வேளைகளில் முறையே 6, 7-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. நேற்று அதிகாலை 5 மணியளவில் 8-ம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கி காலை 8 மணியளவில் மகாபூர்ணாஹூதி நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து யாக சாலையிலிருந்து காலை 8.30 மணியளவில் கடங்கள் புறப்பட்டு காலை 9 மணியளவில் லட்சுமி நரசிம்மர் கருவறை விமானம் மற்றும் பரிவார மூர்த்திகள் விமானங்கள் ஆகியவற்றுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் பெருமாளே சரணம், திருமாலே சரணம் என பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

கும்பாபிஷேகத்தையொட்டி சிங்கப்பெருமாள் கோவில் பகுதிகள் விழாக்கோலம் பூண்டிருந்தன. கோவில் வளாகம் முழுவதும் வாழை மரங்கள், மாவிலை தோரணங்களாலும், வண்ண மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. அன்னதானமும் நடைபெற்றது.

யாகசாலை நாட்களில் தினமும் காலை, மாலை நேரங்களில் வேதபாராயணங்கள், திவ்யபிரபந்த கோ‌‌ஷ்டிகள் நடைபெற்றன. மாலையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கும்பாபிஷேகத்தில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, ஆழ்வார்திருநகரி ஜீயர் எம்பெருமனார், முசிறி எம்.ஐ.டி. கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் பிரவீன்குமார், ரெங்கவிலாஸ் சீவல் உரிமையாளர் ரெங்கநாதன், பி.ஜி.நாயுடு ஸ்வீட்ஸ் உரிமையாளர் பாலாஜி, அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெ‌‌ஷல் நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் கே.ஆர்.வி.கணேசன், உள்ளூர் பிரமுகர்கள் மற்றும் பக்த பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அப்போது மிதமான மழை பெய்து கொண்டிருந்தது. ஆனால், மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் குவிந்திருந்தனர்.

யாகசாலை மற்றும் கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் அர்ச்சகர்கள், ஸ்தானீகர்கள், கைங்கர்யபரர்கள் நடத்தினர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் அறங்காவலர்கள், உபயதாரர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News