ஆன்மிகம்
குருப்பெயர்ச்சியையொட்டி திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் லட்சார்ச்சனை நடைபெற்ற போது எடுத்த படம்.

திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் லட்சார்ச்சனை

Published On 2019-11-09 04:13 GMT   |   Update On 2019-11-09 04:13 GMT
குருப்பெயர்ச்சியையொட்டி திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் நடந்த லட்சார்ச்சனையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சை அருகே திட்டையில் வசிஷ்டேஸ்வரர்கோவில் உள்ளது. திருஞான சம்பந்தரால் பாடல்பெற்ற இந்த கோவில் தமிழகத்தின் தொன்மையான கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது. வசிஷ்ட முனிவரால் பூஜிக்கப்பட்டதால் வசிஷ்டேஸ்வரர் என்றும், சுயம்புவாக தோன்றியதால் தான்தோன்றீஸ்வரர் என்றும் பெயர் கொண்டவர். மற்ற எல்லா கோவில்களிலும் சிவபெருமானின் ஞானவடிவான தட்சிணாமூர்த்தியையே குருவாக பாவித்து வழிபடப்படுகிறது.

ஆனால் திட்டை கோவிலில் வசிஷ்டேஸ்வரர், சுகந்தகுந்தளாம்பிகை சன்னதிகளுக்கு நடுவில் எங்கும் இல்லாத சிறப்போடு தனி சன்னதியில் ராஜகுருவாக எழுந்தருளி பக்தர்களுக்கு குருபகவான் அருள்பாலித்து வருகிறார். கடந்த மாதம் 29-ந் தேதி அதிகாலை 3.45 மணிக்கு குருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசுராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்.

தொடர்ந்து தினமும் குருபகவானுக்கு சிறப்பு பூஜை நடைபெற்று வந்தது. நேற்று திட்டை கோவிலில் லட்சார்ச்சனை நடைபெற்றது. இதையொட்டி உற்சவர் குருபகவானுக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. லட்சார்ச்சனையை செயல் அலுவலர் தனலட்சுமி தொடங்கி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் அவர்கள் தங்களது ராசி, நட்சத்திரத்தை கூறி அர்ச்சனைகளும் செய்தனர். மூலவர் குருபகவானுக்கு வெள்ளிகவசம் அணிவிக்கப்பட்டு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இன்று(சனிக்கிழமை) முதல் வருகிற 12-ந் தேதி வரை சிறப்பு பரிகார ஹோமம் நடக்கிறது.
Tags:    

Similar News