ஆன்மிகம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் திருமஞ்சனம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் திருமஞ்சனம்

Published On 2019-10-19 06:16 GMT   |   Update On 2019-10-19 06:16 GMT
துலா மாத பிறப்பையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் திருமஞ்சனத்திற்காக காவிரி ஆற்றில் இருந்து தங்க குடத்தில் புனித நீர் எடுத்து வரப்பட்டது.
ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் சூரியன் துலா ராசியில் சஞ்சரிப்பதால் இந்த மாதம் துலா மாதம் என்று அழைக்கப்படும். இந்த மாதத்தில் காவிரி ஆறு புனிதமாவதாகவும், துலா (ஐப்பசி) மாதத்தில் ஒரு நாள் ஸ்ரீரங்கம் காவிரியில் புனித நீராடி அரங்கனை தரிசனம் செய்தால் காசியில் வாசம் செய்து பல புண்ணிய செயல்கள் செய்ததற்கு சமம் என்பது ஐதீகம். இதையொட்டி காவிரி ஆற்றில் ஐப்பசி மாதம் முழுவதும் பக்தர்கள் நீராடுவார்கள்.

இந்த மாதம் முழுவதும் காவிரி ஆற்றின் அம்மா மண்டபம் படித்துறையில் இருந்து தினமும் காலை புனிதநீர் தங்க குடத்தில் எடுக்கப்பட்டு யானை மீது வைத்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக ரெங்கநாதர் கோவிலுக்கு கொண்டு வரப்படும். அந்த புனிதநீர் நம்பெருமாள் திருவாராதனம் மற்றும் திருமஞ்சனத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. மற்ற மாதங்களில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து தான் கோவிலுக்கு புனிதநீர் கொண்டு வரப்படுகிறது.

இதன்படி துலா மாத பிறப்பையொட்டி நேற்று காலை காவிரி ஆற்றின் அம்மா மண்டபம் படித்துறையில் இருந்து தங்க குடத்தில் புனிதநீர் எடுக்கப்பட்டு யானை மீது வைத்தும், மேலும் வெள்ளி குடங்களிலும் புனிதநீர் எடுக்கப்பட்டு மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையொட்டி நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு 10.30 மணிக்கு சந்தனு மண்டபம் வந்தடைந்தார். காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை திருமஞ்சனம் கண்டருளினார். மாலை 2.30 மணிக்கு சந்தனு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு மாலை 3 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். துலா(ஐப்பசி) மாதத்தில் நம்பெருமாளுக்கு நடைபெறும் அனைத்து திருமஞ்சனங்களும் தங்க பாத்திரத்தில் நடைபெறும். மேலும் மூலவர் பெரிய பெருமாள், உற்சவர் நம்பெருமாள் மற்றும் தாயார் தங்க ஆபரணங்கள், சாலக்கிராம மாலை அணிந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்கள்.
Tags:    

Similar News