ஆன்மிகம்
முன்னுதித்த நங்கை அம்மன் மீண்டும் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலுக்கு வந்த போது எடுத்த படம்.

முன்னுதித்த நங்கை அம்மனுக்கு சுசீந்திரத்தில் பக்தர்கள் மலர் தூவி வரவேற்பு

Published On 2019-10-14 04:45 GMT   |   Update On 2019-10-14 04:45 GMT
திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழாவில் பங்கேற்று திரும்பிய முன்னுதித்த நங்கை அம்மனுக்கு சுசீந்திரத்தில் பக்தர்கள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நவராத்திரி விழாவுக்காக குமரி மாவட்டத்தில் இருந்து பத்மநாபபுரம் தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன், வேளிமலை முருகன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் ஆகிய சாமி சிலைகள் ஆண்டுதோறும் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மீ்ண்டும் குமரி மாவட்டத்துக்கு வருவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு கடந்த மாதம் (செப்டம்பர்) 26-ந்தேதி சாமி சிலைகள் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து ஊர்வலமாக திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டன. அப்போது வழி நெடுகிலும் பக்தர்கள் மலர் தூவி வரவேற்று வழியனுப்பினர்.

அங்கு நவராத்திரி பூஜைகள் முடிந்த பின்னர், குமரி மாவட்டத்துக்கு கடந்த 10-ந்தேதி சாமி சிலைகள மீண்டும் ஊர்வலமாக புறப்பட்டு நேற்று முன்தினம் மாலை பத்மநாபபுரம் வந்தடைந்தன.பத்மநாபபுரம் அரண்மனை வாசலில் சாமி சிலைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், சரஸ்வதி அம்மன் சிலை தேவாரம் கட்டு கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டு கருவறையில் வைக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து வேளிமலை முருகன், குமாரசாமி கோவிலுக்கு ெகாண்டு செல்லப்பட்டது.

பின்னர், முன்னுதித்த நங்கை அம்மன் சுசீந்திரத்துக்கு புறப்பட்டது. நேற்று காலை 9.20 மணிக்கு முன்னுதித்த நங்கை அம்மன் மேளதாளத்துடன் சுசீந்திரம் வந்தடைந்தது.அங்கு அம்மன் சிலைக்கு மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி தலைமையில் கோவில் பணியாளர்கள், நவராத்திரி குழு தலைவர் வீரபத்திர பிள்ளை மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் 4 ரத வீதிகள் வழியே மலர் தூவி வரவேற்றனர். தொடர்ந்து கோவில் முன் தமிழக மற்றும் கேரள போலீசாரின் அணிவகுப்பு மரியாதை நடந்தது. மேலும், ஆறாட்டு, அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், தீபாராதனை காட்டப்பட்டு சிலை கோவில் கருவறைக்குள் கொண்டு செல்லப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News