ஆன்மிகம்
கொடி மரத்துக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டபோது எடுத்தபடம்.

குற்றாலநாத சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழா கொடியேற்றம்

Published On 2019-10-10 03:43 GMT   |   Update On 2019-10-10 03:43 GMT
குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐப்பசி விசு திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக இலஞ்சி குமாரர் வருகை நடைபெற்றது. பின்னர் அதிகாலை 5.20 மணிக்கு மேல் 6.20 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவிழா வருகிற 18-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. தினமும் காலை மற்றும் மாலையில் சிறப்பு பூஜைகள், வீதி உலா நடக்கிறது. 5-ந் திருநாளான 13-ந் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் விநாயகர், முருகன், குற்றாலநாத சுவாமி, குழல்வாய்மொழி அம்மன் ஆகிய நான்கு தேர்கள் வடம்பிடித்து இழுக்கப்படுகின்றன.

15-ந் தேதி காலை 9.30 மணிக்கும், இரவு 7 மணிக்கும் நடராஜ மூர்த்திக்கு தாண்டவ தீபாராதனை நடக்கிறது. 14-ந் தேதி காலை 10.30 மணிக்கு சித்திர சபையில் நடராஜ மூர்த்திக்கு அபிஷேகம் மற்றும் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை, 18-ந் தேதி காலை 9.20 மணிக்கு விசு தீர்த்தவாரி நடக்கிறது. மதியம் 12 மணிக்கு மேல் இலஞ்சிக்குமாரர் பிரியாவிடை மற்றும் ரி‌‌ஷப வாகன காட்சி, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு ஆகியன நடக்கின்றன.

விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை நெல்லை இணை ஆணையர் பரஞ்சோதி, கோவில் தக்கார் சங்கர், கோவில் நிர்வாக அதிகாரி விஜயலட்சுமி ஆகியோர் செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News