ஆன்மிகம்
திருப்பதி திருக்குடை

சென்னையில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் 28-ந்தேதி தொடங்குகிறது

Published On 2019-09-23 04:48 GMT   |   Update On 2019-09-23 04:48 GMT
திருப்பதி திருக்குடை ஊர்வலம், வரும் 28-ந் தேதி (சனிக்கிழமை) காலை சென்னை பாரிமுனையில் உள்ள பூக்கடை சென்ன கேசவ பெருமாள் கோவிலில் இருந்து சிறப்பு பூஜைகளுடன் தொடங்குகிறது.
விசுவ இந்து பரிஷத் தமிழ்நாடு பொதுச்செயலாளரும், இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் அறங்காவலருமான ஆர்.ஆர்.கோபால்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருமலை திருப்பதி பிரம்மோற்சவத்தின் போது, தமிழக பக்தர்கள் சார்பில், இந்து தர்மார்த்த சமிதி, 11 வெண்பட்டுக்குடைகளை ஏழுமலையானுக்கு ஆண்டுதோறும் சமர்ப்பித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான திருப்பதி திருக்குடை ஊர்வலம், வருகிற 28-ந் தேதி, (சனிக்கிழமை) காலை 10.31 மணிக்கு, பூக்கடை சென்ன கேசவ பெருமாள் கோவிலில் இருந்து தொடங்குகிறது.

விசாகா ஸ்ரீ சாரதா பீடாதிபதி ஸ்வரூபானந்தேந்ரா சரஸ்வதி மகா சுவாமி மற்றும் விசாகா ஸ்ரீ சாரதா பீடம் உத்தர பீடாதிபதி ஸ்வத்மனந்தேந்த்ர சரஸ்வதி சுவாமி ஆகியோர் அருளாசி வழங்கி, திருக்குடை ஊர்வலத்தை தொடங்கிவைக்கின்றனர். இந்த ஊர்வலத்தை, முதல் 3 நாட்களில், 15 லட்சம் பக்தர்கள் தரிசிக்கின்றனர்.

திருப்பதி திருக்குடைகளை தரிசித்தால் மங்களம் பெருகும், வறுமை நீங்கும், நோய் நொடிகள் விலகும், வியாபாரம் அபிவிருத்தியாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திருக்குடை ஊர்வலம், என்.எஸ்.சி. போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக வந்து, மாலை 4 மணிக்கு கவுனி தாண்டுகிறது. பின்னர் சால்ட் கொட்டகை (நடராஜா தியேட்டர்), செயின்ட் தாமஸ் சாலை, சூளை நெடுஞ்சாலை, பெரம்பூர் பேரக்ஸ் சாலை, கொன்னூர் நெடுஞ்சாலை, தாக்கர் சத்திரம் வழியாக காசி விஸ்வநாதர் கோவிலை சென்றடைகிறது.

பின்னர் அங்கிருந்து அக்டோபர் 2-ந் தேதி மணவாள நகர், திருப்பாச்சூர் வழியாக திருச்சானூர் சென்றடைகிறது. 3-ந் தேதி திருமலையில் மாடவீதி வலம் வந்து வஸ்திரம் மற்றும் மங்கள பொருட்களுடன் திருப்பதி ஜீயர்கள் முன்னிலையில் திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் திருக்குடைகள் சமர்ப்பணம் செய்யப்படுகிறது.

ஊர்வலம் வரும்போது திருக்குடையின் மீது நாணயங்களை வீசுவதோ, காணிக்கைகள் செலுத்துவதோ கூடாது. திருக்குடை செல்லும் வழியில் தெருவிலோ, சமாஜங்களிலோ அல்லது கோவில்களிலோ பொதுவான பூஜைக்கு ஏற்பாடு செய்வதாக இருந்தால், முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும்.

ஊர்வலத்தில் கலந்துகொள்ள விரும்பும் பஜனை, பிரபந்தக் கோஷ்டிகள், கலைநிகழ்ச்சி குழுக்கள் பொறுப்பாளர்களை தொடர்புகொண்டு விவரங்களை தெரிவிக்கவும். மேலும் விவரங்களுக்கு 7373099562, 7373099545 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News