ஆன்மிகம்
பழனி முருகன் கோவிலில் விளக்கு பூஜை நடந்ததையும், சின்னக்குமாரருக்கு தீபாராதனை காட்டியதையும் படத்தில் காணலாம்.

பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் வழிபாடு

Published On 2019-09-20 04:01 GMT   |   Update On 2019-09-20 04:01 GMT
பழனி முருகன் கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை உற்சவத்தையொட்டி பக்தர்கள் குவிந்தனர்.
பழனி முருகன் கோவிலில், ஒவ்வொரு தமிழ் மாதமும் கார்த்திகை உற்சவம் நடைபெற்று வருகிறது. நேற்று புரட்டாசி மாத கார்த்திகை உற்சவம் ஆகும். இதையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. தொடர்ந்து 4.30 மணிக்கு விளாபூஜையில் முருகப்பெருமானுக்கு சன்னியாசி அலங்காரமும், 8 மணிக்கு சிறுகாலசந்தி பூஜையில் வேடர் அலங் காரமும் நடைபெற்றது.

அதையடுத்து 9 மணிக்கு காலசந்தி பூஜையில் பாலசுப்பிரமணியர் அலங்காரமும், பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையில் வைதீகர் அலங்காரமும் நடைபெற்றது. பின்னர் மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையில் முருகப்பெருமானுக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கார்த்திகை உற்சவத்தையொட்டி நேற்று பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். இதனால் கிரிவீதி, சன்னதிவீதி, பாதவிநாயகர் கோவில், மின்இழுவை ரெயில்நிலையம், படிப்பாதை ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

மாலை 6 மணிக்கு மேல் மலைக்கோவில் வெளிப்பிரகாரத்திலுள்ள கல்யாண மண்டபத்தில் 108 விளக்கு பூஜை நடைபெற்றது. இதையடுத்து 6.40 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் உட்பிரகாரத்தில் சின்னக்குமாரர் எழுந்தருளினார். அப்போது சாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் 7 மணிக்கு மேல் தங்கரத புறப்பாடு நடந்தது. 
Tags:    

Similar News