ஆன்மிகம்
பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோவிலில் கொடியேற்றம் நடந்தபோது எடுத்த படம்.

அகோபில வரதராஜ பெருமாள் கோவிலில் ஆவணி பிரம்மோற்சவ விழா தொடங்கியது

Published On 2019-09-09 07:18 GMT   |   Update On 2019-09-09 07:18 GMT
பழனி அருகே பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோவிலில் ஆவணி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பழனி முருகன் கோவிலின் உபகோவிலான அகோபில வரதராஜ பெருமாள் கோவில் பழனியை அடுத்த பாலசமுத்திரத்தில் அமைந்துள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி கோவிலில் உள்ள மூலவர் அகோபில வரதராஜ பெருமாள், சீதேவி-பூதேவி அம்மன், கொடிமரம், கொடிப்படம் ஆகியவற்றுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து காலை 8 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என சரண கோஷம் எழுப்பினர். முன்னதாக கொடிப்படம் உட்பிரகாரம் சுற்றி கொண்டு வரப்பட்டது. இந்ந நிகழ்ச்சியை காண சிறப்பு அலங்காரத்தில் வரதராஜ பெருமாள், சீதேவி-பூதேவியுடன் வெளிப்பிரகாரம் வந்தார்.



கொடியேற்றத்துக்கு பின்னர் கொடிமரம், சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 16-ந்தேதி நடைபெறுகிறது.

நேற்று நடந்த கொடியேற்ற நிகழ்ச்சியில் கோவில் துணை ஆணையர் செந்தில்குமார், மேலாளர் உமா, கண்காணிப்பாளர் முருகேசன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News