ஆன்மிகம்
வீட்டுமனை யோகம் யாருக்கு?

வீட்டுமனை யோகம் யாருக்கு?

Published On 2019-08-26 07:38 GMT   |   Update On 2019-08-26 07:38 GMT
காடு ஆறு மாதம் என்று சொந்த வீட்டிலும் வாடகை வீட்டிலும் மாறி மாறி இருக்கும் நிலை போன்ற பிரச்சினைகளுக்கு காரணம் என்ன? என்று பார்க்கலாம்.
சாதாரண மனிதர் முதல் சாதனை மனிதர் வரை அனைவரின் விருப்பமும் சொந்த வீட்டில் வசிக்க வேண்டும் என்பதே.

“வீட்டைக் கட்டிப்பார்; கல்யாணம் பண்ணிப்பார்” என்ற பழமொழிக்கேற்ப சொந்த வீடு என்பது சவால் விடும் அளவுக்கு கடினமானதுதான் என்றாலும் அந்த சவாலை எதிர்கொள்ள அனைவரும் தயாராகவே இருக்கிறார்கள். ஏனெனில் ஒவ்வொருவருக்கும் சொந்த வீடு என்பது அவ்வளவு அவசியமானது.

போதிய பொருளாதாரம் இருந்தும் சொந்த வீடு யோகம் கிடைப்பதில் ஒரு சிலருக்கு தடை இருக்கும். அதே போல இன்னும் சிலருக்கு வாடகைக்கு விட்டு வருமானம் ஈட்டும் வகையில் பல வீடுகள் இருந்தாலும் சொந்த வீட்டில் குடியிருக்க முடியாத நிலை இருக்கலாம். மேலும் சிலருக்கு வீடு இருந்தும் காலம் காலமாக அடமானத்திலேயே இருக்கும் நிலை நாடு ஆறு மாதம்.. காடு ஆறு மாதம் என்று சொந்த வீட்டிலும் வாடகை வீட்டிலும் மாறி மாறி இருக்கும் நிலை போன்ற பிரச்சினைகளுக்கு காரணம் என்ன? என்று பார்க்கலாம்.

ஒருவர் ஜாதகத்தில் சொந்த வீடு அமைய 4-ம் இடமும் நான்காம் வீட்டு அதிபதியும் வலுப்பெற்று இருக்க வேண்டும். அதோடு வீடு வாகனம் ஆடம்பரப் பொருட்களின் அதிபதியான சுக்ரன் பூமிக்காரகன் செவ்வாய் கர்மக்காரகனும் விதிப் பயனைப் பெற்றுத் தருபவருமான சனி ஜீவனக்காரகனும் தேவையான பொருளாதாரம் தருபவருமான குரு ஆகியோரும் வலிமை பெற்று சுபத் தன்மையுடன் இயங்க வேண்டும்.

1 2 10 ஆகிய இடங்களுக்கான அதிபதிகள் 4-ம் இடத்து அதிபதியுடன் சம்பந்தம் பெற்று சுபத் தன்மையுடன் இயங்கும் போது ஒரு ஜாதகரின் சொந்த உழைப்பில் வீடு அமையும். தாய் தாய் வழி முன்னோர்கள் மூலம் சொத்து கிடைக்கும். அந்த சொத்துக்கள் மூலம் வருமானமும் வந்து சேரும்.

1 5 9 ஆகிய இடங்களின் அதிபதிகள் 4-ம் இடத்து அதி பதியுடன் சம்பந்தம் பெறும் போது பூர்வீக சொத்து தந்தை தந்தை வழி முன்னோர்களால் உருவாக்கப்பட்ட சொத்துக்கள் கிடைக்கும்.

1 3 11 போன்ற இடங்களுக்கான அதிபதிகள் 4-ம் இடத்து அதிபதியோடு சம்பந்தம் பெறும் போது உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் சொத்தை அனுபவிக்கும் வாய்ப்பைப் பெறுவர்.

1 4-ம் இடத்து அதிபதிகள் 6-ம் இடத்துக்கான அதிபதியோடு சம்பந்தம் பெற்றிருந்தால் அந்த ஜாதகர் சொத்தை உருவாக்குபவராக இருப்பார். ஆனாலும் அவர்களின் சொத்து மதிப்பை விட கடன் தொகை அதிகமாக இருக்கும். வருமானம் முழுவதும் சொத்தை காப்பாற்றவே செலவு செய்ய நேரிடும். அதே நேரம் 1 4 6-ம் இடத்து அதிபதிகள் குருவோடு இணைந்திருந்தால் கடன் எளிதில் அடைபடும்.

1 மற்றும் 4-ம் இடத்து அதிபதிகள் 7-ம் இடத்து அதிபதியோடு சம்பந்தம் பெற்றிருந்தால் சொத்து உருவாகும். 7-ம் வீட்டு அதிபதியோடு எத்தனை கிரகம் சம்பந்தம் பெறுகிறதோ அத்தனை சொத்து கிடைக்க வழி ஏற்படும். அதே போல் லக்னம் சுப கிரகமாக இருந்தாலோ அல்லது குரு பார்வை இருந்தாலோ திருமணத்திற்கு பிறகு சொத்து கூடிக் கொண்டே போகும். அசுப கிரக சம்பந்தம் பெற்றால் சொத்து இழப்பு ஏற்படும்.

1 4-ம் இடத்து அதிபதிகள் 8-ம் வீட்டு அதிபதியின் சம்பந்தம் பெற்றிருந்தால் சொத்து தொடர்பான வழக்கு நடைபெறும். கடன் வழக்கு எதிரியால் அவமானம் ஏற்படும். அதே நேரம் குரு சம்பந்தம் பெறும் போது திடீர் அதிர்ஷ்டம் உயில் புதையல் மூலம் சொத்து கிடைக்கும்.

12-ம் இடத்து அதிபதி 4-ம் இடத்து அதிபதியோடு சம்பந்தம் பெற்றிருந்தால் சொத்து விரயம் ஏற்படும். 4-ம் இட அதிபதி அல்லது 4-ல் நின்ற கிரகம் வக்ரம் நீச்சம் அஸ்தமனம் பெறாமல் குரு லக்ன சுபரின் சம்பந்தம் பெற்றிருந்தால் சிறப்பான பலன் அமையும்.

4-ம் வீட்டு அதிபதியோடு புதன் சுக்ரன் சம்பந்தம் பெறும் போது அழகிய கலை நயமான வீடு அமையும். 4-ம் வீட்டு அதிபதியோடு சனி கேது சம்பந்தம் பெற்றிருந்தால் பழைய அல்லது வாஸ்து குறையுள்ள வீட்டில் வாழும் நிலை ஏற்படும். 4-ம் வீட்டு அதிபதியோடு ராகு சம்பந்தம் பெற்றிருந்தால் பிரம்மாண்டமான வீட்டில் குடியேறும் வாய்ப்பு உண்டு. ஆனால் சொத்தில் சட்ட சிக்கல் இருக்கும்.

பூமி வீடு தொடர்பான பிரச்சினை உள்ளவர்கள் திருவள்ளூர் சிறுவாபுரி பாலசுப்பிரமணியம் ஆலயம் சென்று வழிபட ஏற்றம் உண்டாகும்.

பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி
Tags:    

Similar News