ஆன்மிகம்
நெல்லையப்பர்

நெல்லையப்பர் கோவில் ஆவணி மூலத்திருவிழா 29-ந்தேதி தொடங்குகிறது

Published On 2019-08-24 08:04 GMT   |   Update On 2019-08-24 08:04 GMT
நெல்லையப்பர் கோவில் ஆவணி மூலத்திருவிழா வருகிற 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
கருவூர் சித்தர் நெல்லையப்பர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். கோவில் நடை அடைக்கப்பட்டதால் நெல்லையப்பரை, கருவூர் சித்தர் பெயர் சொல்லி அழைத்தார். சுவாமி சத்தம் கொடுக்காததால் நெல்லையப்பருக்கு சாபம் கொடுத்து விட்டு இங்கு ஈசன் இல்லை இதனால் எருக்கு எழ என்று கூறிவிட்டு மானூர் சென்றுவிட்டார். இதை அறிந்த பாண்டிய மன்னன் சுவாமியை மானூருக்கு அழைத்து சென்று சித்தருக்கு காட்சி கொடுக்க செய்து அவரை இங்கு அழைத்து வந்து சாபத்தை நீக்கிய திருவிளையாடல் நெல்லையப்பர் கோவிலில் நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் நெல்லையப்பர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மூலத்திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படும்.

இந்த ஆண்டுக்கான ஆவணி மூலத்திருவிழா வருகிற 29-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 4-ம் திருநாளான வருகிற 1-ந் தேதி இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்திலும், விநாயகர் வெள்ளி மூஞ்சுறு வாகனத்திலும், சுப்பிரமணியர் மயில் வாகனத்திலும், சண்டிகேசுவரர் சப்பரத்திலும் நெல்லை டவுன் ரத வீதிகளில் வீதி உலா நடக்கிறது.

வருகிற 6-ந் தேதி இரவு 9 மணிக்கு கருவூர் சித்தர் நெல்லை டவுன் நான்கு ரதவீதிகளிலும் வீதி உலா சென்று சங்கரன்கோவில் சாலை வழியாக மானூர் அம்பலவாண சுவாமி கோவிலை சென்றடைகிறார். 7-ந் தேதி இரவு 1 மணிக்கு நெல்லையில் இருந்து சந்திரசேகரர், சண்டிகேசுவரர், பாண்டியராஜா, தாமிரபரணி, அகஸ்தியர், குங்குலிய கலயநாயனார் ஆகிய மூர்த்திகள் நெல்லை டவுன் நான்கு ரதவீதிகளையும் சுற்றி சங்கரன்கோவில் சாலை வழியாக ராமையன்பட்டி ரஸ்தாவை கடந்து மானூர் சென்றடைகிறார்கள். 8-ந் தேதி மானூரில் அம்பலவாண சுவாமி கோவிலில் காலை 7 மணிக்கு கருவூர் சித்தருக்கு நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடக்கிறது. பின்னர் சுவாமிகள் அங்கு இருந்து புறப்பட்டு நெல்லையப்பர் கோவிலை வந்தடைகிறார்கள்.

இதற்கான ஏற்பாடுகளை நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் யக்ஞநாராயணன், கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
Tags:    

Similar News