ஆன்மிகம்
தர்ப்பை புல்

தர்ப்பை புல்லுக்கு இருக்கும் சக்தி

Published On 2019-08-20 09:03 GMT   |   Update On 2019-08-20 09:03 GMT
தர்ப்பை புல் விஷத்தை முறிக்க வல்லது. இதனால் தான் கிரகண காலங்களில் பரவும் நச்சுத்தன்மையை நீக்க, உப்பு கலந்த உணவுப் பொருட்களில் தர்ப்பையை போட்டு வைப்பார்கள்.
துளசி, தர்ப்பை, வில்வம் உள்ள இடங்கள் மிகவும் பவித்திரம் வாய்ந்ததாகச் சொல்லப்படுகிறது. தர்ப்பை புல்லில் உஷ்ண வீரியம் உள்ளது. அது நீரை தூய்மைப் படுத்தக்கூடியது. விஷத்தை முறிக்க வல்லது. இதனால் தான் கிரகண காலங்களில் பரவும் நச்சுத்தன்மையை நீக்க, உப்பு கலந்த உணவுப் பொருட்களில் தர்ப்பையை போட்டு வைப்பார்கள். கும்பாபிஷேகத்தின் போது யாக சாலையில் உள்ள கும்பத்தின் ஆற்றலை பிம்பத்தில் ஒடுக்கும் கிரியையில் தங்கம், வெள்ளி கம்பிகளுடன் முக்கியமாக தர்ப்பைக் கயிற்றைப் பயன்படுத்துவார்கள்.

தர்ப்பையில் ஆண் தர்ப்பை, பெண் தர்ப்பை, அலி தர்ப்பை என மூன்று வகை உண்டு. ஆண் தர்ப்பை அடி முதல் முடி வரை சமமாக இருக்கும். மேல் பகுதி தடித்துக் காணப்படுவது பெண் தர்ப்பை. அடியில் தடித்துக் காணப்படுவது அலி தர்ப்பை. தர்ப்பையின் அடியில் பிரம்மனும், நடுவில் திருமாலும், நுனியில் சிவனும் வாசம் செய்வதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

தேவர்களை நினைத்துச் செய்யும் தர்ப்பணத்தில், தர்ப்பையின் நுனியாலும், மனிதர்களை நினைத்துச் செய்யும் தர்ப்பணத்தில் தர்ப்பையின் நடுவாலும், பித்ருக்களை நினைத்துச் செய்யும் பொழுது தர்ப்பையை மடித்து அடிப்பகுதியாலும் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

வைதீகச் சடங்கின் போது பவித்திரம் என்ற தர்ப்பையிலான மோதிரத்தை வலது கை மோதிர விரலில் அணிந்து கொண்டே கர்மத்தைத் தொடங்க வேண்டும். இந்த விரலில் சுபநாடி ஓடுவதால் அதில் தர்ப்பையை அணியும்போது கபசுத்தி ஏற்படுகிறது.

ஜபம், ஹோமம், தானம், தர்ப்பணம் அனைத்திலும் பவித்திரம் வாய்ந்த தர்ப்பையை அணிவது அவசியம். மாவிலை, தர்ப்பை இரண்டுமே நல்ல அதிர்வுகளைக் கொண்டிருக்கின்றன. யாகத்தைக் காப்பதற்கு வைக்கப்படும் யாகேஸ்வர தேவரின் கும்பத்திலுள்ள ஞானகட்கம் தர்ப்பையால் செய்து அமைக்கப்படும். திருநள்ளாறு தலத்தில் தலவிருட்சமே தர்ப்பைதான் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News