ஆன்மிகம்
கொடிப்பட்டம் வீதி உலா வந்ததையும், கொடியேற்றம் நடந்ததையும் படத்தில் காணலாம்.

அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடி திருவிழா கொடியேற்றம்

Published On 2019-07-20 04:45 GMT   |   Update On 2019-07-20 04:45 GMT
திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் கடற்கரையோரம் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் 187-வது வைகுண்டர் ஆண்டு ஆடி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு, அதிகாலை 5 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு நடந்தது. பின்னர் கொடிப்பட்டம் அவதாரபதியை ஒரு முறையும், கொடிமரத்தை 5 முறையும் சுற்றி வலம் வந்தது.

காலை 6.50 மணிக்கு அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் தர்மர் திருவிழா கொடியேற்றினார். தொடர்ந்து அய்யா புஷ்ப வாகனத்தில் எழுந்தருளி, அவதாரபதியை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மதியம் உச்சிப்படிப்பு, பணிவிடை, அன்னதர்மம் நடந்தது. மாலையில் திருஏடு வாசிப்பு, உகப்படிப்பு, பணிவிடை, புஷ்ப வாகனத்தில் அய்யா பவனி வந்து, பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

விழாவில் அய்யாவழி அருளிசை புலவர் குரு சிவச்சந்திரன், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் தக்கார் பிரதிநிதி பாலசுப்பிரமணிய ஆதித்தன், அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை துணை தலைவர் தோப்புமணி, கவுரவ தலைவர் சுந்தரபாண்டி, செயலாளர் பொன்னுத்துரை, பொருளாளர் ராமையா நாடார், துணை செயலாளர் ராஜேந்திரன்,

இணை தலைவர்கள் அய்யாபழம், விஜயகுமார், பால்சாமி, ராஜதுரை, இணை செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், தங்ககிருஷ்ணன், செல்வின், வரதராஜ பெருமாள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் மாலையில் அன்ன வாகனம், சர்ப்ப வாகனம், கருட வாகனம், குதிரை வாகனம், ஆஞ்சநேயர் வாகனம், இந்திர வாகனம், காளை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அய்யா எழுந்தருளி, பதியை சுற்றி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

தினமும் காலை, மதியம், இரவில் பக்தர்களுக்கு அன்னதர்மம் வழங்கப்படுகிறது. விழாவின் சிகர நாளான வருகிற 29-ந் தேதி (திங்கட்கிழமை) பகல் 12.05 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.
Tags:    

Similar News