ஆன்மிகம்
திருக்கல்யாண உற்சவத்தில் நடனபாதேஸ்வரர், அஷ்டதாலாம் பிகை சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.

திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

Published On 2019-07-13 04:52 GMT   |   Update On 2019-07-13 04:52 GMT
திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து இன்று, தேரோட்டம் நடைபெற உள்ளது.
நெல்லிக்குப்பத்தை அடுத்த திருக்கண்டேஸ்வரத்தில் பிரச்சித்திபெற்ற நடனபாதேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்து, வீதியுலா நடைபெற்று வரு கிறது. இதில், நேற்று முன்தினம் திருக்கல்யாணம் நடந்தது.

இதில் நடனபாதேஸ்வரர், அஷ்டதாலாம்பிகை மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பின்னர் நடனபாதேஸ்வரருக்கும், அஷ்டதாலாம்பிகைக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சாமி அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

விழாவில் சிகர திருவிழாவான தேரோட்டம் இன்று(சனிக்கிழமை) காலை 7.30 மணிக்கு நடைபெறுகிறது. தொடர்ந்து நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை நடராஜர் தரிசனமும், இரவில் தீர்த்தவாரியும், நாளை மறுநாள்(திங்கட்கிழமை) காலையில் சண்டிகேஸ்வரர் தரிசனமும், இரவில் ரி‌‌ஷப வாகனத்தில் சாமி வீதியுலா, 16-ந்தேதி இரவு பைரவர் உற்சவமும், 17-ந்தேதி தெப்ப உற்சவமும் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமி, தக்கார் ஜெயசித்ரா மற்றும் சரவணன், சேனாதிபதி குருக்கள் மற்றும் கோவில் பணியாளர்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News