ஆன்மிகம்
நெல்லை சந்திப்பு கைலாசநாதர் கோவில் வைகாசி திருவிழா தேரோட்டம் நடந்தபோது எடுத்தபடம்.

கைலாசநாதர் கோவிலில் வைகாசி திருவிழா தேரோட்டம்

Published On 2019-06-11 04:01 GMT   |   Update On 2019-06-11 04:01 GMT
நெல்லை சந்திப்பு கைலாசநாதர் கோவிலில் வைகாசி திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
நெல்லை சந்திப்பு கைலாசபுரத்தில் கைலாசநாதர்-சவுந்திரவள்ளி அம்பாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி திருவிழா 10 நாட்கள் நடைபெறும்.

இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனையும், இரவில் சுவாமி-அம்பாள் வீதி உலாவும் நடந்தது. 8-ந் திருநாளான நேற்று முன்தினம் காலையில் சிவகாமி அம்பாள் சமேத ஆனந்த நடராஜர் பச்சை சாத்தி கோலத்தில் வீதி உலாவும், மாலையில் குதிரை வாகனத்தில் சந்திரசேகர் பரிவேட்டையும், செப்பு சப்பரத்தில் கங்காளநாதர் வீதி உலாவும் நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. காலை 8.30 மணிக்கு சுவாமி, அம்பாள் தேரில் எழுந்தருளினர். இதைத்தொடர்ந்து 9.15 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. தேர் 4 ரத வீதிகளையும் சுற்றி 10.35 மணி அளவில் நிலையத்தை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது. தேரோட்டத்தையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு தீர்த்தவாரி நடக்கிறது.
Tags:    

Similar News