ஆன்மிகம்
ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியபோது எடுத்த படம்.

ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா தொடங்கியது

Published On 2018-08-03 04:06 GMT   |   Update On 2018-08-03 04:06 GMT
ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான ஏரல் சேர்மன் அருணசாலசாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலையில் பழைய காயலில் இருந்து சங்குமுக தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. நேற்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் காலை 7 மணிக்கு கோவில் கொடிமரத்தில் கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ.கருத்தப் பாண்டிய நாடார் கொடியேற்றினார்.

தொடர்ந்து தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவில் சுவாமி கேடய சப்பரத்தில் அருணாசலசாமி திருக்கோலத்தில் எழுந்தருளி, கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 9-ம் திருநாள் வரையிலும் தினமும் இரவில் சுவாமி பல்வேறு வாகனங்களில் பல்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். தினமும் இரவில் வில்லிசை, பக்தி சொற்பொழிவு, பரதநாட்டியம், இன்னிசை நிகழ்ச்சி போன்றவை நடக்கிறது.

10-ம் திருநாளான வருகிற 11-ந் தேதி (சனிக்கிழமை) ஆடி அமாவாசை திருவிழா நடக்கிறது. 
Tags:    

Similar News