ஆன்மிகம்
கேதார கவுரி நோன்பு

நாளை தம்பதியரை ஒன்றிணைக்கும் கேதார கவுரி நோன்பு

Published On 2019-10-26 05:09 GMT   |   Update On 2019-10-26 05:09 GMT
கணவன் - மனைவி கருத்து வேறுபாடு இருப்பவர்கள், கேதார கவுரி விரதத்தை கடைப்பிடித்தால் கணவன் - மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்.
27-10-2019 கேதார கவுரி நோன்பு

‘சக்தி இல்லையேல் சிவம் இல்லை.. சிவம் இல்லையேல் சக்தி இல்லை’ என்பது நம்மிடையே நிலவி வரும் நம்பிக்கை. ‘சக்தி’ என்றால் ‘உயிர்.’ ‘சிவம்’ என்றால் ‘உடல்.’ உயிர் இல்லாத உடலால் தனித்து இயங்க முடியாது. கணவனும் மனைவியும் அன்பையும், ஐக்கியத்தையும் பரிமாறிக் கொண்டால் மட்டுமே இல்லறம் நல்லறமாகும்.

தம்பதிகள் இருவரும் பொருளீட்டினால்தான் குடும்ப தேவையை நிறைவு செய்ய முடியும் என்ற நிலை இருப்பதால், தம்பதிகள் தங்களுடைய கருத்துக்களை பரிமாறிக் கொள்ள நேரம் கிடைப்பதே அரிதாகி விட்டது. அதுதான் விரிசலை உண்டாக்கி, விவாகரத்துக்கு வித்திடுகிறது.

ஜோதிட ரீதியாக கணவன் - மனைவி கருத்து வேறுபாடு ஏற்படுவதற்கான காரணங்களைப் பார்ப்போம்.

திருமணம் தொடர்பான பாவங்களான ஒன்றாம் இடமான லக்னம், இரண்டாம் இடமான குடும்ப ஸ்தானம், ஏழாம் இடமான களத்திர ஸ்தானம் மற்றும் எட்டாம் இடமான ஆயுள், மாங்கல்ய ஸ்தானம் மற்றும் அதன் அதிபதிகள் வலிமையுடன் இருக்க வேண்டும். இந்த பாவங்களுக்கு பாவ கிரகங்கள் , மறைவிட அதிபதிகளின் சம்பந்தம் இல்லாமல் இருக்க வேண்டும். அத்துடன் அதன் அதிபதிகள் நீச்சம், பகை, வக்ரம், அஸ்தமனம் அடையாமல் இருக்க வேண்டும். மிகக் குறிப்பாக 7-ம் அதிபதி பகை, நீச்சம், அஸ்தமனம் பெறாமல் வலிமையுடன் இருக்க வேண்டும்.

ஆண் - பெண் இருவருக்கும், திருமணமாகி 15 ஆண்டுகள் வரை ஒரே தசை வராமல் இருப்பது சிறப்பு. ராசிக் கட்டப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்ய வேண்டும். நட்சத்திர பொருத்தம் பார்க்கக் கூடாது. திருமணத்தின் போது ஆண், பெண் இருவரில், ஒருவருக்காவது கேந்திர, திரிகோணதிபதிகளின் தசை நடக்க வேண்டும். தீய பலன்களை தரும் தசை நடந்தால் ராசிக் கட்டப் பொருத்தம் இருந்தாலும் மண வாழ்வு சங்கடம் தரும்.

இருவரின் ஜாதகத்திலும் பகை கிரகங்களின் தசை நடந்தால் கருத்து வேறுபாடு, பிரிவினை அதிகரிக்கும். தசா நாதர்களை விட நட்சத்திர நாதர்கள் பகை கிரகமாக இல்லாமல் இருக்க வேண்டும். நீதிமன்ற வாசலில் நிற்கும் பல தம் பதிகளின் ஜாதகத்தை ஆய்வு செய்தால், ஜாதகத்தில் எந்த பிரச்சினையும் தென்படாது. தம்பதிகளின் தசையை நடத்தும் கிரகம் பகை கிரகங்களாக இருக்கும் அல்லது தசையை நடத்தும் கிரகம் நின்ற நட்சத்திரம் பகை கிரக நட்சத்திரமாக இருக்கும். தசையை நடத்தும் கிரகத்தை விட தசையை நடத்தும் கிரகம் நின்ற நட்சத்திரத்திற்கு வலிமை அதிகம். கேந்திர திரிகோணதிபதிகள் தசை நடக்கும் போது சந்திக்கும் இடர்பாடுகளுக்கு தசை நடத்தும் கிரகம் நிற்கும் நட்சத்திரமே காரணமாக அமைகிறது. திருமணம் முடிந்து பல வருடங்கள் ஆன தம்பதியினர் கூட இந்த கிரகங்களின் தசா காலங்களில் கருத்து வேறுபாட்டை சந்திக்கின்றனர்.

மேலும் ஜனன கால ஜாதகத்தில் ஆண், பெண் யாருக்கேனும் பகை கிரகங்களின் சேர்க்கை இருந்தால், பல விரும்பத்தகாத மன வருத்தத்தை திருமணத்திற்கு முன் அல்லது பின் தருகிறது. குறிப்பிட்ட சில கிரக இணைவுகள் திரு மணத்தை நடத்தி தருவதில் தாமத நிலையை ஏற்படுத்துகிறது. ஒரு சில கிரக இணைவுகள் திருமணத்திற்கு பிறகு பிரச்சினையை உருவாக்கும். மண வாழ்வையே முறிக்கும் சக்தி படைத்தவைகள்.

7-ம் அதிபதியின் சாரநாதன் வலிமை இழந்து நிற்பது, பெண் ஜாதகத்தில் செவ்வாய் ராகு-கேது சம்பந்தம், ஆண் ஜாதகத்தில் சுக்ரன், ராகு- கேது சம்பந்தம் இல்லாமல் இருக்க வேண்டும். பெண் ஜாதகத்தின் சுக்ரனுக்கும், ஆண் ஜாதகத்தின் செவ்வாய்க்கும் சம்பந்தம் இருக்க வேண்டும்.

பிரச்சினையை தரும் பிரபஞ்சமே அதற்கு தீர்வையும் தந்து இருக்கிறது. மேற்கண்ட காரணங்களால் கணவன் - மனைவி கருத்து வேறுபாடு இருப்பவர்கள், கேதார கவுரி விரதத்தை கடைப்பிடித்தால் கணவன் - மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்.

ஐப்பசி மாதத்தில் சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிப்பார். அந்த மாதம் முழுவதும் சூரியன் நீச்சமாக தனது வலிமை முழுவதையும் இழந்து இருப்பார். ஆனால் அமாவாசையன்று சூரியனுடன் சந்திரன் இணையும் காலம் சூரியனுக்கு வலிமை அதிகரிக்கும்.

சூரியன் - பிதுர்காரகன் (தந்தை)

சந்திரன் - மாதுர்காரகன் (தாய் )

சூரியனின் அதிதேவதை - பரமேஸ்வரன்

சந்திரனின் அதிதேவதை - கவுரி

நீச்சம் பெற்ற தந்தை சூரியனோடு, தாயான சந்திரன் இணையும் நாள், ஐப்பசி அமாவாசை. ‘சக்தி இல்லையேல் சிவம் இல்லை’ என்ற கருத்தை உணர்த்த, பலம் இழந்து நீச்சம் பெற்ற நிலையில் இருக்கும் பிதுர்காரகன் சூரியனோடு, சக்தியாகிய அன்னையின் அம்சமான சந்திரன் இணையும்போது சிவம் சக்தியைப் பெறுகிறது. சிவசக்தி இணைவு நடைபெறும் அந்த அமாவாசை நாளில் சிவ சக்தியை நினைத்து ‘கேதார கவுரி விரதம்’ கடைப்பிடித்தால் கணவனின் ஆயுள், ஆரோக்கியம் சீராக இருக்கும். கணவன் - மனைவிக்குள் அன்பும், ஐக்கியமும் பெருகும்.

சிவசக்தி இணைந்திருந்தால் மட்டுமே உலகம் இயங்கும். அதாவது கணவன் வலிமை குறைந்தவராக இருந்தால் கூட, மனைவி துணை நிற்க கணவன் நிலை சீராகும். கேதார கவுரி நோன்பை கடைப்பிடிக்கும் பழக்கம் எல்லாரிடமும் இல்லை. பழக்கம் இல்லாதவர்கள் பார்வதி - பரமேஸ்வரரை மனதார வேண்டி இயன்றவரை அசைவ உணவை தவிர்த்து வழிபட்டால் தம்பதிகளிடையே நிலவும் கருத்து வேறுபாடு மறையும். விவாகரத்து பெற்ற தம்பதிகள் கூட மீண்டும் சேர்ந்து வாழ வழிபிறக்கும்.

அன்றைய தினம் கால புருஷ 7-ம் அதிபதி சுக்ரனும் ஆட்சி பலம் பெற்று இருப்பதால் பார்வதி பரமேஸ்வர வழிபாடு, பிரிந்து வாழும் பல தம்பதியினரை ஒன்று சேர்க்கும். மேலும் ஜனன கால ஜாதகத்தில் 8-ம் இட வலிமை குறைவால் திருமணத் தடையை சந்திக்கும் பெண்கள், 21 சுமங்கலிப் பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள், குங்குமம் தந்து வணங்கி ஆசி பெற, சிவ - பார்வதி அருளால் திருமணத் தடை அகன்று விரைவில் திருமணம் நடைபெறும்.

பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி
Tags:    

Similar News