ஆன்மிகம்
கால பைரவர்

கால பைரவரை எந்த கிழமைகளில், எந்த ராசியினர் விரதம் இருந்து வழிபடுதல் சிறப்பு

Published On 2019-10-21 08:29 GMT   |   Update On 2019-10-21 08:29 GMT
சிவனின் அம்சமான கால பைரவர், எந்தெந்த நாளில், எந்த ராசியினர் விரதம் இருந்து வழிபடுவது சிறப்பு, எப்படி வழிபட வேண்டும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
பைரவர் சிவனின் 64 திரு உருவத்தில் ஒருவர் ஆவார். சொர்னாகர்சன பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், கால பைரவர், உக்கிர பைரவர் என பல பெயர்களில் அழைக்கப்படுகின்றார். பைரவரின் சன்னதி ஒவ்வொரு சிவன் கோயிலிலும் வடகிழக்கு பகுதியில் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றார்.

பைரவர் விரதம் அனைத்து அஷ்டமி திதிகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. அதிலும் செவ்வாய்க் கிழமையில் வரும் அஷ்டமி திதி மிகவும் விசேஷமாக பார்க்கப்படுகின்றது. பைரவ விரதம் தொடர்ச்சியாக 21 அஷ்டமி திதிகளில் கடைப்பிடிப்பது மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகின்றது.

இத்தனை சிறப்பு மிக்க பைரவரை எந்தெந்த கிழமைகளில், வழிபட்டால், என்ன பலன்கள் என்பதை பார்ப்போம்.

ஞாயிறு கிழமை:

சிம்ம ராசியினர் ஞாயிறு கிழமையில் வழிபடுவதால், தள்ளிப்போகும் திருமணம் கை கூடும். இந்த கிழமையில் சிம்ம ராசி ஆண், பெண்கள் பைரவருக்கு ராகு காலத்தில் அர்ச்சனை, ருத்ராட்ச அபிஷேகம், வடை மாலை சாற்றி வழிபட்டால், திருமண தடை நீங்கி விரைவில் நடைபெறும். ஸ்ரீ பைரவர் அருட்கடாட்சம் பெற தேய்பிறை அஷ்டமி விரத வழிபாடும் பலன்களும்

திங்கள் கிழமை:

கடக ராசியினர் திங்கட் கிழமை அல்லது சங்கடஹர சதுர்த்தி தினத்தில் பைரவருக்கு பன்னீர் அபிஷேகம் செய்து, சந்தன காப்பிட்டு, புனுகு பூசி, நந்தியாவட்டை மலர் மாலை அணிவித்து வழிபட்டு வந்தால், கண் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.

செவ்வாய்க் கிழமை:

மேஷம் மற்றும் விருச்சிக ராசியினர் செவ்வாய்க் கிழமையில் பைரவரை வழிபடுவதால் சிறப்பான பலன்களை தரும். மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் இழந்த பொருள் திரும்ப பெறலாம்.

புதன் கிழமை:

மிதுனம், கன்னி ராசியினர் புதன் கிழமைகளில் பைரவரை வழிபடுவதன் மூலம் நற்பலன்களைப் பெறலாம். நெய் தீபம் ஏற்றி வழிபடுவதால் பூமி லாபம் கிடைக்கும்.

வியாழக்கிழமை :

தனுசு, மீன ராசியினர் பைரவரை வழிபடுவதன் மூலம் சிறப்பான பலன்கள் கிடைக்கும். வியாழக்கிழமையில் விளக்கேற்றி வழிபட்டால் பில்லி சூனியம் விலகும்.

வெள்ளிக் கிழமை

ரிஷபம், துலாம் ராசியினர் வழிபடுவதால் சிறப்பான பலன்களை தரும். வெள்ளிக் கிழமை மாலையில் வில்வ இலையாலும், வாசனை மலர்களாலும் சகசரநாம அர்ச்சனை செய்து வந்தால் வறுமை நீங்கி செல்வம் சேரும்.

சனி கிழமை:

மகரம், கும்ப ராசியினர் சனிக்கிழமையன்று பைரவரை வழிபடுவதால் சிறப்பான பலன்களை தரும். சனி பகவானுக்கு பைரவர் தான் குரு. இதனால் அஷ்டம சனி, ஏழரை சனி, அர்த்தாஷ்டமச் சனி விலகி நல்லது நடக்கும் என்பது ஐதீகம். மேலும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச தீபம் ஏற்றி வழிபாட்டால் காலத்தினால் தீர்க்கமுடியாது தொல்லைகள் நீங்கி, நல்லவை வந்து சேரும்.
Tags:    

Similar News