ஆருத்ரா தரிசனம் அன்று விரதம் இருந்து நடராஜரை வழிபாடு செய்தால் அறியாமல் ஆற்றிய பாவங்கள் அனைத்தும் நீங்கி மோட்சம் பெறலாம்.
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்.
இதனை கொண்டாடும் விதமாக சிவபெருமான் ஆனந்தத் தாண்டவமாடிய சிதம்பரம் கனகசபையிலும், ஊர்த்துவத் தாண்டவமாடிய திருஆலங்காடு ரத்தின சபையிலும், பாண்டிய மன்னனுக்காக இடக்கால் மாறி ஆடிய மதுரை திருஆலவாய் வெள்ளிசபையிலும், திருநெல்வேலியிலுள்ள தாமிர சபையிலும், குற்றாலத்திலுள்ள சித்திர சபையிலும் இந்த நன்னாளில் ஆருத்ரா அபிஷேகமும், ஆருத்ரா தரிசனமும் விமரிசையாக நடைபெறுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.
பெரும்பாலான சிவாலயங்களில் லிங்கமாக காணப்படுகின்ற ஈசன் இது போன்ற சில தளங்களில் நடராஜராக காட்சி தருகிறார். இவ்வாறு காட்சி தருகின்ற நடராஜ பெருமானுக்கு ஆண்டில் 6 முறை மட்டுமே அபிஷேக, அலங்காரங்கள் நிகழ்த்தபடுவது குறிப்பிடத்தக்கது. அதனால் இந்நிகழ்வானது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது.
ஆருத்ரா தரிசன காட்சியை காண்பதற்கு கண்கள் கோடி வேண்டும். அவ்வளவு அற்புதமாக இருக்கும். ஆருத்ரா தரிசனம் அன்று விரதம் இருந்து சிவன் கோவிலில் நடராஜருக்கு நடக்கும் அபிஷேகத்தை கண்டு வாழ்வில் பிறவா பயனை அடையலாம். ஆருத்ரா தரிசனம் அன்று விரதம் இருந்து நடராஜரை வழிபாடு செய்தால் அறியாமல் ஆற்றிய பாவங்கள் அனைத்தும் நீங்கி மோட்சம் பெறலாம்.
மார்கழி மாத திருவாதிரை தினத்தன்று, விரதம் இருந்து சிவபெருமானை பூஜித்து வழிபட்டால், நல்ல கணவன் கிடைப்பார். தாலிப் பலன் பெருகும். பாவங்கள் நீங்கும், அறிவும் ஆற்றலும் கூடும் என்பன போன்ற எண்ணற்றப் பலன்களைக் கொடுக்கும் விரதமாக இது உள்ளது. விபூலன், வியாக்கிரபாதர் போன்றவர்கள் இந்த விரதத்தை அனுஷ்டித்து பலன் பெற்றுள்ளனர்.