பெண்ணாடம் அருகே உள்ள பெ.பொன்னேரியில் புனித தோமையார் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினந்தோறும் ஆலயத்தில் கூட்டு திருப்பலி நடைபெற்று வந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடந்தது. தொடர்ந்து இரவு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேர்களில் காவல் சம்மனசு, அன்னை மாதா, புனித தோமையார் ஆகிய சொரூபங்கள் வைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து பங்குதந்தை குழந்தைராஜ் தலைமையில் தேர்பவனி நடைபெற்றது. பவனியானது முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலய வளாகத்தை வந்தடைந்தது. இதில் பெ.பொன்னேரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.