மேல்நாரியப்பனூரில் புனித அந்தோணியார் ஆலய ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.
இதையொட்டி புதுச்சேரி- கடலூர் உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் பெருவிழா திருப்பலி நடைபெற்றது. பின்னர் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேர்களில் புனித சூசையப்பர், புனித மரியாள், புனித அந்தோணியார் சொரூபங்கள் வைக்கப்பட்டது. அதன்பிறகு ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது.
பவனியானது மேல்நாரியப்பனூர் பகுதியின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் சின்னசேலம், விழுப்புரம், சேலம், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், புதுச்சேரி, பெங்களூரு, கடலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் மற்றும் பல்வேறு மதத்தினர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை பால்ராஜ் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.