ஆன்மிகம்

வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

Published On 2019-04-22 04:00 GMT   |   Update On 2019-04-22 04:00 GMT
ஈஸ்டர் பண்டிகையையொட்டி வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
ஏறக்குறைய 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சிலுவையில் உயிர்விட்ட ஏசு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டு 3-ம் நாள் உயிர்த்து எழுந்த உயிர்ப்பு நிகழ்ச்சியை ஈஸ்டர் பண்டிகையாக உலகில் உள்ள கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகின்றனர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் இரவு பேராலய கலை அரங்கத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. முன்னதாக பாஸ்கா திருவிழிப்பு சடங்கு நடந்தது. இதில் ஏசு உயிர்த்தெழுவதை உணர்த்தும் வகையில் “பாஸ்கா ஒளி“ ஏற்றப்பட்டது.

கலையரங்க வளாகத்தின் மைய பகுதியில் இருந்து ஏற்றப்பட்ட பாஸ்கா ஒளியை பேராலய அதிபர் பிரபாகர் அரங்கத்தின் மேடைக்கு எடுத்து சென்றார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, கையில் மெழுகுவர்த்திகளை ஏந்தியப்படி ஜெபம் செய்தனர். இரவு 11.45 மணியளவில் வாண வெடிகள் முழங்க, மின்னொளியில் பேராலய கலையரங்கின் மேல்கூரையில் சிலுவை கொடியை கையில் தாங்கிய ஏசு கிறிஸ்து உயிர்த்தெழும் காட்சி தத்ரூபமாக நிகழ்த்தி காண்பிக்கப்பட்டது.

பின்னர் பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் துணை அதிபர் சூசைமாணிக்கம், பொருளாளர் யாகப்பாராஜரத்தினம், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட்தன்ராஜ், ஆண்டோஜெயராஜ் மற்றும் உதவி பங்கு தந்தையர்கள், அருட்சகோதரர்கள், சகோதரிகள் உள்பட திரளானோர் கலந்துகொண்டனர். சிறப்பு பிரார்த்தனைகளில் கலந்து கொள்ள பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்திருந்ததால் கூட்டம் அலைமோதியது. ஆங்காங்கே பெரிய திரைகள் அமைக்கப்பட்டு, பிரார்த்தனை நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன.

ஈஸ்டர் பண்டிகையையொட்டி நேற்று பேராலயத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் திருப்பலி நடைபெற்றன. இதைத்தொடர்ந்து மாலை 6.45 மணிக்கு தேர்பவனியும், 7.45 மணிக்கு திவ்ய நற்கருணை ஆசீரும் நடைபெற்றது.
Tags:    

Similar News