சினிமா செய்திகள்
ஒரே தேதியில் வெளியான 3 படங்கள் - கார்த்தி நெகிழ்ச்சி
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரும் கார்த்தி, ஒரே தேதியில் வெளியான அவருடைய படங்கள் குறித்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
நடிகர் கார்த்தி, கடந்த 2007-ம் ஆண்டு வெளியான பருத்திவீரன் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இதையடுத்து பையா, மெட்ராஸ், சிறுத்தை, தீரன், கைதி என பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார். தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன், பி.எஸ்.மித்ரன் இயக்கும் சர்தார் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இந்நிலையில் கார்த்தி தற்போது அவருடைய சமூகவலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. அவர் நடிப்பில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த பையா, கொம்பன் மற்றும் சுல்தான் ஆகிய மூன்று படங்களும் ஏப்ரல் 2-ஆம் தேதி அன்று வெளியானது. இந்த மூன்று படங்களின் நினைவுகளை பற்றியும் அவர் பகிர்ந்துள்ளார்.
ஒரே நாளில் வெளியான படங்கள்
அதில் அவர் குறிப்பிட்டிருப்பது, பையா திரைப்படம் எனக்கு முற்றிலும் புதிய கண்ணோட்டத்தைக் வெளிப்படுத்த வித்திட்டது. நான் அறிமுகமாகி 8 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் என்னை கிராமத்து மண்ணுக்கு கொம்பன் திரைப்படம் அழைத்துச் சென்றது. சுல்தான் திரைப்படம் மீண்டும் என்னை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தியது. இவை எல்லாமே ஒரே வெளியீட்டுத் தேதியில்தான். இந்தப் படைப்புகளை நினைவுகளில் நிலைநிறுத்திய இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், அன்பான ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி! என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
#Paiyaa gave me an entirely new outlook😎. #Komban took me back to village folks after almost 8 years since my debut🐏. #Sulthan reintroduced me to kids 🎺. All released on the same date. Thanks to my directors, producers and dear fans for making them memorable. pic.twitter.com/x9kpcWnCuS
— Actor Karthi (@Karthi_Offl) April 2, 2022