சினிமா செய்திகள்
செல்ஃபி

செல்ஃபி திரைப்படத்தை பாராட்டிய பிரபல இயக்குனர்

Published On 2022-03-30 09:18 GMT   |   Update On 2022-03-30 09:18 GMT
ஜி.வி.பிரகாஷ் மற்றும் கவுதம் மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் செல்ஃபி படத்தை பாராட்டி பிரபல இயக்குனர் பதிவிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஜி.வி.பிரகாஷ் தற்போது நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் உருவாகி வரும் ‘செல்ஃபி’ படத்தை இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்குகிறார். கல்லூரி மாணவராக ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக வர்ஷா பொல்லம்மா நடித்துள்ளார். மேலும் இயக்குனர் கவுதம் மேனனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாசுடன் கவுதம் மேனன் இணைந்து பணியாற்றுவது இதுவே முதல்முறை. இப்படத்தில் வாகை சந்திரசேகர், சங்கிலி முருகன், தங்கதுரை ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நீட் தேர்வை மையப்படுத்தி எடுப்பட்ட இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருக்கிறார். 

இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இப்படத்தை இயக்குனர் தங்கர் பச்சான் பாராட்டி நீண்ட பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பது, “கல்விக்கூடங்கள் பணம் கொள்ளையடிக்கும் கூடங்களாக உருவாக்கப்பட்டபின் தமிழ்நாடு அதன் கல்வியின் தரத்தை இழந்து வருகிறது. இந்த தனியார் கல்விக்கூடங்கள் எப்படிப்பட்ட தரகர்களை உருவாக்கி வைத்துள்ளது. இதில் அப்பாவி பெற்றோர்களும் மாணவர்களும் தொடர்ந்து பலியாகிக் கொண்டிருக்கிறார்கள் எனும் உண்மையை நேர்த்தியாக பொருள் உரைக்க பதிவு செய்வதுதான் ’செல்பி’ திரைப்படம்.


தங்கர் பச்சான்

மதிமாறன் எனும் புதிய இயக்குனரின் ஆற்றலும் திறமையும் வியப்பில் ஆழ்த்துகின்றன. அதேபோன்று குணாநிதி எனும் அறிமுக நடிகரின் இயல்பான மனம் கவரும் நடிப்பாற்றல் நம்பிக்கை ஊட்டுகிறது. ஜி.வி.பிரகாஷ் முதன்மை பாத்திரத்தை தாங்கி நிற்கிறார். இதுவரை இல்லாத அளவிற்கு இப்படம் அவரின் திரைப்பயணத்தை மேலும் விரிவுப்படுத்தும்.

முழு திரைக்கதையின் மையப்புள்ளியான எதிர்நாயகன் பாத்திரத்தில் கெளதம் மேனன் நடிப்பதுதான் இத்திரைப்படத்தின் கருவிற்கு மேலும் வலுவூட்டுகிறது. திரையில் தோன்றும் அனைத்து நடிகர்களும் சிறு பிசகில்லாமல் நடிப்பது ஒன்றே இயக்குனரின் திறனை பறை சாற்றும். கடலூர் மாவட்ட வட்டார வழக்கு மிகச் சிறப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

மக்களைக் காப்பாற்றுவதாக கூறப்படும் நான்கு தூண்களும் அதன் மீதான நம்பிக்கையினை இழந்து கொண்டிருக்கும் நிலையில் திரைப்படங்கள்தான் அரிதாக எப்பொழுதாவது சமூகத்தின் சிக்கல் சீர்கேடுகள் குறித்து கேள்வி எழுப்புகின்றன. ’செல்பி’ அதனை திறம்படச் செய்திருக்கிறது. வெறும் பணப்பைகளை நிரப்புவதற்காக மட்டுமே உருவாக்கப்படும் திரைப்படங்களுக்கு இடையில் இப்படைப்பின் வரவு கவனத்துக்குரியது” எனக் பதிவிட்டுள்ளார்.


Tags:    

Similar News